மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக்கி ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் கிங் இயக்கியிருக்கும் படம்.
சீதா (ஐஸ்வர்யா) ஒரு இடத்துக்கு போய்ச் சேர வேண்டிய நேரத்தில் போகாமல் சற்று தாமதமாக போகிறார். அந்த தாமதத்தால் உயிரிழப்பு நேர்கிற அளவில் நடந்த ஒரு ஆபத்திலிருந்து தப்புகிறார். அந்த இடத்துக்கு பயணித்து வந்தபோது யார் யாரால் தாமதமானதோ அவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல நினைக்கிறார்.
இப்படி ஆச்சரியப்பட வைக்கிற கதையில் துவங்கும் படத்தில், சீதா சம்பந்தப்பட்டவர்களைச் சந்திப்பதும் அந்த தருணங்களின் சுவாரஸ்யங்களையும் கலந்துகட்டியிருக்கிறது திரைக்கதை.
அப்பா இயக்குநர். மகள் காதல் கதையின் கதாநாயகி. அதனாலோ என்னவோ காதலனுடன் ஒரு கட்டிப் பிடிப்பு, ஒரு முத்தம் என ஏதுமில்லாமல் வெறுமனே உணர்வுகளை உடல்மொழியாலும் வசனங்களாலும் மட்டுமே வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அதை மிகச்சரியாக செய்திருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
நாயகன் நிரஞ்சன், சிலபல காரணங்களால் கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவித்து வரும் நாயகியின் மனதை மாற்றுவதற்காக களமிறங்கும் மனநல நிபுணர் கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார்.
அவருடன் இணைந்து பயணிக்கும் சீதா அவரது மனதில் நுழைகிற விதம், காதலர்களாகி பிரியத்தைப் பரிமாறிக் கொள்ளும் தருணம் அத்தனையும் இதமான அத்தியாயங்கள்.
சீதாவின் அப்பாவாக சத்யராஜ், நிரஞ்சனின் தாத்தாவாக பிரகாஷ்ராஜ், பாட்டியாக சுமித்ரா என சீனியர் நடிகர் நடிகைகள் கச்சிதமாக பயன்பட்டிருக்கிறார்கள்.
அர்ஜுனும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் வந்து போகிறார்.
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு நேர்த்தி.
கதாபாத்திரங்களில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். அது சினிமாவிலாவது அப்படி இருக்கிறார்களே என்ற திருப்தி தருகிறது. திரைக்கதையில்
போதிய விறுவிறுப்பு இல்லாததால், முன் பாதியைவிட பின்பாதியில் சுவாரஸ்யம் குறைந்திருப்பதால் அலுப்பு தட்டுகிறது.
Rating 3 / 5


