கல்யாணம் நடந்து முடிந்து முதலிரவுக்கான அறையில் இருக்கும்போதுதான் மணமகன் மருதநாயகத்துக்கு, தனக்கு மனைவியாகியிருக்கிற முத்துச்செல்வி ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருந்ததும், அவளை நமக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. நடந்த தவறை சரி செய்யும் விதமாக மருதநாயகம் முத்துச்செல்வியை அவளது காதலருடன் சேர்த்து வைத்துவிடலாம் என நினைக்கிறார். அவர் நினைத்ததை செய்ய முடிந்ததா இல்லையா என்பது திரைக்கதை…
முத்துச்செல்விக்கு அவள் வீட்டார் மருதநாயகத்தை கட்டாய கல்யாணம் செய்து வைக்கிற இந்த கதையில், மருதநாயகத்துக்கு தனக்கு கல்யாணம் என்பதே முத்துச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு ஒருசில மணி நேரம் முன்புதான் தெரிகிறது என்பது சுவாரஸ்யம். மொத்தத்தில் நடந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை.
இப்படி ஏடாகூடமாக, சீரியஸாக துவங்கும் கதையை சிரிப்பு மசாலாவில் போட்டுப் புரட்டி ரசிகர்களை குஷியாக்குகிறார் அறிமுக இளம் இயக்குநர் ராஜா கருப்பசாமி.
மருதநாயகமாக ரிஷிகாந்த். கோபம், படபடப்பு, நிதானம், பாசம் என எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்தும்படியான பாத்திரம். உள்வாங்கி நடித்திருக்கிறார்.
இப்படியொரு நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிற அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறவராக அனிஷ்மா. பேசுகிற வசனங்கள் குறைவு. முகபாவங்களால் அசத்துவது அதிகம்.
மற்ற முக்கிய கேரக்டர்களில் அப்துல் லீ, இயக்குநர் ஏ வெங்கடேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதம்.
காதலிக்க மட்டும் தெரிந்தவனாக, அதை தாண்டி எதற்கும் தயாராக இல்லாத ‘சோப்ளாங்கி’யாக, கதையின் பிரதான பாத்திரத்தில் கவனம் பெறுகிறார் படத்தை இயக்கியிருக்கிற ராஜா கருப்பசாமி.
கதையோட்டத்திற்குப் பொருத்தமான பின்னணி இசையையும், வளமான இசையில் பாடல்களையும் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் பரத் சங்கர். சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தின் தலைப்பு ‘கிளுகிளுப்பான அடல்ஸ் ஒன்லி சப்ஜெக்டாக இருக்குமோ?’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கலாம். ஆனால், அப்படியான ஆபாச சமாச்சாரங்கள் ஏதுமில்லாத படம் இது.
வழக்கமான கல்யாணம் என்றாலே சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கிடையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த கதையில் நடப்பது வில்லங்கமான கல்யாணம். அப்படியிருக்கும்போது சண்டை சச்சரவுகள் சற்று தூக்கலாகத்தான் இருக்கும். அதன்படியே இருக்கிறது. குடும்பத்தோடு பார்க்கும்படியான பொழுதுபோக்குப் படைப்பாக மலர்கிறது.
Rating 3.5 / 5 

