குளிர்ச்சியான ஊட்டியில் நடக்கிற சூடான காதல் கதை.
அந்த பெண் அவனிடம் நன்றாக பேசிப் பழகுகிறாள். அதனால் அவனுக்கு அவள் மீது காதல் உருவாகிறது. அவன் அவளிடம் தன் காதலைச் சொல்வதற்குள், அவள் அவனிடம் அவளது காதல் பற்றியும் காதலன் பற்றியும் எடுத்துச் சொல்லி, அந்த காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கச் சொல்கிறாள். அவள் அவனை நண்பனாகவே நினைத்திருக்கிறாள். அவன் அது புரியாமல் அவள் மீது காதலிக்க துவங்கியிருக்கிறான். அவள் அப்படி சொன்னதும் அதை எதிர்பார்க்காத அவன் உள்ளுக்குள் அதிர்கிறான். அதிர்ந்த அவன் அடுத்தடுத்து என்ன செய்கிறான் என்பதே அறிமுக இயக்குநர் அஜயன் பாலா இயக்கியிருக்கும் ‘மைலாஞ்சி’யின் மீதிக்கதை.
அரிய பறவையை போட்டோ எடுக்கப் போன இடத்தில் காதல் பறவையாகி திரிவது, தான் நேசிக்கும் பெண் இன்னொருவனின் காதலி என தெரிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளாவது, அந்த பெண் அந்த காதலனுடன் இணைந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்கெட்ச் போடுவது, அப்படி செய்வதெல்லாம் தவறு என உணர்வது என கதாநாயகனாக வருகிற ஸ்ரீராம் கார்த்திக் ஏற்றிருக்கிற கதாபாத்திரம் கனமானது. அதை உணர்ந்து தன்னால் இயன்ற பெஸ்டை கொடுத்திருக்கிறார்.
நாயகி கிரிஷா குருப்புக்கு ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரம். முகம் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க, அவரது நடிப்பிலிருக்கும் குழந்தைத்தனம் ரசிக்க வைக்கிறது. அது கதைக்கு அவ்வளவாக பயன்படாததாகவே இருக்கிறது என்பதுதான் முக்கிய தகவல்.
நாயகியின் காதலனாக வருபவர், நாயகனின் மாமாவாக வருகிற முனீஸ்காந்த், பறவைகள் ஆராய்ச்சியாளராக வருகிற சிங்கம்புலி என மற்றவர்கள் இயக்குநர் சொன்னதை செய்திருப்பதாக படுகிறது. ஸ்பெஷலாய் ஏதுமில்லை.
தரமான ஒளிப்பதிவாளர் செழியனைக் கூட்டிப் போய் ஊட்டியில் கேமராவை வைக்கச் சொன்னால் சும்மாயிருப்பாரா? ஒட்டுமொத்த அழகையும் திரட்டி நிரப்பியிருக்கிறார்.
பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா தந்திருக்கும் இசை 20, 30 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.
காதல் கதையில் ஒரே நபர் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். அப்படியான கதையில் மலர்ந்துள்ள மைலாஞ்சியில் ரசிக்கும்படி சில அம்சங்கள் இருந்தாலும் ‘தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கிற அளவுக்கு இருக்கிறதா?’ என்றால், ‘எஸ்’ என்று சொல்ல தயங்க வேண்டியிருக்கிறது.
Rating 2 / 5 

