கவின் நயன்தாரா நடித்து வெளியான ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தது படக்குழு.
நிகழ்வில் நடிகர் கவின் பேசுகையில்..,
“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.
இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.
கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,
“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.
எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.

