ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.

டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டபோது இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர்.
டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் காட்சியில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நெருக்கமாக அறிந்த ஒரு இடத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் உருவான கதைதான் ‘டோரதி’. ஆனால், இப்படம் எழுப்பும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் பொருந்தும். TIFF திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது”.
ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “’டோரதி’ திரைப்படத்தில் பேசப்படும் கதைக்களமும் அதன் வலிமையான உணர்வுகளும் மொழி தடைகளை கடந்து உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் தகுதி உடையது. நட்பு, அடையாளம் மற்றும் மனித கண்ணியம் குறித்த கதையை கார்த்திக் உருவாக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இந்த கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். TIFF திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான தருணம்” என்றார்.
சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “TIFF திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டது சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் பயணத்தில் முக்கியமான தருணம். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட கதைதான் ‘டோரதி’. இந்தப் படத்தில் திறமையானவர்களை கார்த்திக் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஒன்றிணைத்துள்ளது. வலிமையான இந்தியக் கதை எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையே எங்களை இணைத்துள்ளது. ‘டோரதி’ தனது சர்வதேசப் பயணத்தை டொராண்டோவில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.
‘டோரதி’ திரைப்படத்திற்கான அசல் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய இரண்டு பாடல்களும் யூடியூபில் தலா 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. மேலும், இவ்விரு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, இந்த இரண்டு பாடல்களும் ‘டோரதி’ படத்தின் இசை அடையாளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய முழுமையான இசைத்தொகுப்பும் சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து ‘டோரதி’ திரைப்படத்தின் இசையை நேரடியாக இசைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், இளையராஜாவின் இசை திரையிலிருந்து நேரடி இசை நிகழ்ச்சி அரங்கிற்கும் பயணித்தது.
குணீத் மோங்கா கபூர், TIFF திரைப்பட விழாவுடனான தனது 15 ஆண்டுகளுக்கும் மேலான உறவை தொடர்ந்து வருகிறார். அவர் தயாரித்த TIFF திரைப்பட விழாவில் இடம்பெற்ற சில முக்கியமான படங்கள் இதோ, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (2010), ‘பெட்லர்ஸ்’ (2012), ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் பாகம் 2’ (2012), ‘தி லஞ்ச்பாக்ஸ்’ (2013), ‘மான்சூன் ஷூட்அவுட்’ (2014), ‘கில்’ (2023), ‘யெல்லோ பஸ்’ (2023) மற்றும் இப்போது ‘டோரதி’ (2026). ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம், TIFF திரைப்பட விழாவுடனான குணீத் மோங்கா கபூரின் நீண்டகால உறவு, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடனான புதிய கூட்டணியுடன் இணைகிறது. இதன் மூலம், சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் சர்வதேசத் திரைப்பட விழாப் பயணம் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து விரிவடைகிறது.
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இப்படத்தை வழங்குகின்றன.

