வேண்டுதல், தோஷம் கழித்தல், திதி, தெவசம் என பலவற்றுக்காக ராமேஸ்வரம் கடலோரம் குவியும் பக்தர்கள் கடலுக்குள் வீசியெறியும் நாணயங்களைச் சேகரித்து பிழைப்பு நடத்தும் சாமானியன் தவசிமுத்து.
கடலில் மூழ்கிக் கிடந்த விலையுயர்ந்த கற்கள் பதித்த தங்கப் பதக்கம் ஒன்று அவன் கையில் கிடைக்க, அதை அவன் போலீஸிடம் ஒப்படைக்க, போலீஸ் அவன் மீது பதக்கத்தை திருடியதாக பொய் வழக்கு போட, அவன் கையிலிருப்பது புதையல் என நீதிமன்றத்தில் வழக்கு வேறு திசையில் வேகமெடுக்க, தவசிமுத்து பெரியளவில் குற்றம் செய்தவனாகிறான்.
உண்மையில் ஒரு தவறும் செய்யாத அவன் அதன் பிறகு நடத்தும் சட்டப் போராட்டங்களும், திருட்டுப் பட்டம் கட்டப்பட்டதால் பறிபோன மானத்துக்கு விலை கேட்பதுமாக தடதடக்கிறது மலையாள சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் என்ன விலை.
செய்யாத குற்றத்துக்கு போலீஸிடம் அடிபட்டு ரத்தம் சிந்துவதிலிருந்து, நிரபராதி என கோர்ட் விடுவிக்கும் வரை தனது தேர்ந்த நடிப்பால் தவசிமுத்து கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் கருணாஸ்.
கருணாஸை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற தனது வாதத் திறமையை பயன்படுத்தும் வழக்கறிஞர் கேரக்டரில் நிமிஜா சஜயனின் ஆளுமைமிக்க நடிப்பு வெளிப்படுகிறது.
முதலமைச்சராக இளைய திலகம் பிரபு, கருணாஸின் மனைவியாக விஜயலெஷ்மி, தங்கையாக ஷாஷா சிவகுமார், போலீஸாக மோகன்ராம், நீதிபதியாக நிழல்கள் ரவி, அதிரடி அட்வகேட்டாக லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
அல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் கடற்பரப்பையும் சுற்று வட்டாரத்தையும் அழகிய கோணங்களில் பதிவு செய்திருக்கிறது. கதையின் ஆழத்திற்கும் உணர்வுக்கும் உயிரோட்டம் சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை.
வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு, இந்திய சட்ட திட்டங்கள் சாமானிய மனிதர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டிய விதம் படத்தின் தனித்துவம்!
Rating 3 / 5 

