இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் குட் நியூஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
இவ்விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து இயக்குநர் விஜய் துவக்கி வைக்க, புகழ்பெற்ற இயக்குநர் பாலா கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மூவிட்ரான் புரொடக்ஷன் பேனரின் கீழ் சாய்வினோத் ஜெயக்குமார் பெருமையுடன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, சாய்பிரபு ஜெயக்குமார் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.
பிரபல இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதைகளை உருவாக்குவதில் சிறந்த அனுபவம் பெற்ற நாகேந்திரமுருகன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “குட் நியூஸ்” படத்தின் மூலம் அவர் தனது தனித்துவமான இயக்கத்திலும், கதைசொல்லல் பாணியிலும் வெள்ளித்திரையில் தடம் பதிக்கவுள்ளார்.
இப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி அனில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் வரிசையில், பிரவீண்குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக்வாசன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சித்துகுமார் இசையமைக்க, அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். எல். எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் , பி.ஆர்.ஓ ரேகா செய்தித் தொடர்பு பணிகளையும் கவனிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உடனடியாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் பேசுகையில்: “உறவுகள், குடும்ப மதிப்புகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளைப் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டாடும் படமே ‘குட் நியூஸ்’. கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே, இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது. ஒரு அர்ப்பணிப்புள்ள குழுவை இதற்காக இணைத்துள்ளோம். இந்தத் திரைப்படம் ஒரு மறக்க முடியாத குடும்பக் கொண்டாட்டமாக அமையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.”
இயக்குநர் நாகேந்திரமுருகன் பேசுகையில்:
“என் திறமை மீது நம்பிக்கை வைத்து, என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். இயக்குநர் பாண்டிராஜ் சாருடன் பணிபுரிந்ததன் மூலம், குடும்பங்களுக்குப் பிடித்தமான கதைகளை எப்படி உருவாக்குவது என்பதை நான் கற்றுக்கொண்டேன். ‘குட் நியூஸ்’ திரைப்படம் உணர்வுகள், சிரிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு எதார்த்தமான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். இதை முழு உண்மையோடும் அர்ப்பணிப்போடும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

