‘குடி காதலைக் கெடுக்கும்’ என்ற ஒன்லைனில் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக ‘ப்ராமிஸ்.’
குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த ப்ராமிஸை மீறுகிறான் நாயகன் மித்ரன். அவன் திருந்த மாட்டான் என்பதை தெரிந்துகொள்ளும் காதலி லெஷ்மி அவனுக்கு பை பை சொல்கிறாள். மித்ரன் அந்த பிரிவின் வலிக்கு மதுவை மருந்தாக எடுத்துக் கொள்கிறான். அளவுக்கதிகமான மது விஷமாகிறது; உயிரே போய்விடும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிறது. அப்படியே அவனை விட்டுவிட மனமில்லாத லெஷ்மி, அவன் மீது அன்பையும் தாலிக்கு கழுத்தையும் காட்டி அவனை மீட்கிறாள். மகிழ்ச்சியாக வாழ்ந்து கர்ப்பமாகிறாள்.
நல்ல விஷயம் நடந்துள்ள நிலையில், விதி யாரை விட்டது என்பது போல் பேராபத்தான எச் ஐ வி அவனைத் தொற்றியதாக மெடிக்கல் ரிப்போர்ட் அதிர்ச்சி தருகிறது. மித்ரன் குடிகாரன்தான் என்றாலும் எச் ஐ வி பாதிக்கிற அளவு தவறான பாதையில் போகவில்லை என்பது முக்கியச் செய்தி.
சரி, எச் ஐ வி உடல் ரீதியான உறவால் மட்டும் வருவதல்ல என்பதால், வேறு எப்படி வந்திருக்கும் என்பதும், அதனால் மித்ரன் சந்திக்கும் விளைவுகளும் கதையின் மீதியாக பயணிக்கிறது.
குடிகாரனாக, குடியிலிருந்து திருந்தியவராக, நோய் பாதிப்பு என்கிற தகவல் கிடைத்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் தவிப்பவராக கதைக்குப் பொருந்திய நாயகனாக வலம் வருகிறார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிற அருண்குமார் சேகரன்.
தன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி குடித்து கூத்தடிக்கும் காதலனை வெறுப்பதில் துவங்கி அவனுக்கு மனைவியாகி உற்சாக வாழ்வது, கணவன் வெளியில் சொல்ல முடியாத வியாதிக்கு ஆளானபின் கனிவான பார்த்துக் கொள்வது என கனமான காட்சிகளில் நதியா சோமுவின் நடிப்பில் நல்ல தேர்ச்சி இருக்கிறது. கிராமத்துப் பெண்ணுக்கான லட்சணம் நிரம்பியிருப்பவரின் உடல் இன்னும் கொஞ்சம் தேறினால் கூடுதல் அழகாக தெரிய வாய்ப்பிருக்கிறது.
நாயகன் நாயகியின் உறவினர்கள், நட்பு வட்டத்தினர் என மற்றவர்கள் கேரக்டர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
சரவண தீபனின் பின்னணி இசை காட்சிகள் பரபரப்பு கூட்ட உதவுகிறது. ‘தேன்மழை சாரலே’ மற்றும் ‘உதிர்கிறேன் நானடி’ உள்ளிட்ட பாடல்களை ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவுப் பணியை தரமாக செய்திருக்கிறார் வினோத் குமார்.
குடிபோதை மனிதனை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்கிற வழக்கமான கதையில், எச் ஐ வி அதுஇதுவென சேர்த்திருக்கும் சம்பவங்கள் ஓரளவு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
கையாண்டிருப்பது நல்ல சப்ஜெக்ட்தான் என்பதை மறுப்பதற்கில்லை. கால் நூற்றாண்டுக்கு முன் வந்திருந்தால் ப்ராமிஸாக பெரியளவில் கவனம் ஈர்த்திருக்கலாம்.
Rating 2.5 / 5 

