சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்திய படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி.’
வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய சுசீந்திரன், ”2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச் செய்து தந்தது.
எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர் ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார்.
படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறைய புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன், அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார்.
நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார்” என்றார்.

