ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும் விதமாக யார் எது செய்தாலும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படியிருக்க, அவரிடம் படித்த மாணவன் ஒருவன் அவர் வைத்திருப்பதைப் போலவே பைக் வாங்குகிறான்; அவருக்கே உயரதிகாரியாகிறான். அதையெல்லாம்விட அவருக்கு அதிக அதிர்ச்சி தருகிற ஒரு விஷயத்தையும் செய்கிறான். இப்படியொரு பரபரப்பான கதையில் ராமன் தன் ஈகோவை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார், அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை… இயக்கம் கணேசன் நாச்சிமுத்து
ஈகோ ராமனான வருகிற ரோபோசங்கர் எந்த நேரமும் ஈகோ தலைக்கேறி, பொறாமையால் மூளை சூடாகி, கோபம் கொப்பளிக்க சுற்றிச் சுற்றி வருகிறார். வசனங்கள் குறைவென்பதால் முகத்தை கோணல்மானலாக்கி, கைகளைப் பிசைந்து, பல்லைக் கடித்து உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.
அவரிடம் படித்து, வறுமைச் சூழலில் தவித்தபடி அரசுப் பணிக்கான தேர்வெழுதி, அவருக்கே உயரதிகாரியாக வருகிற கெத்தான ரோலில் சிபி புவன சந்திரன். ஹீரோயிஸத்துக்கு வாய்ப்பில்லாத கேரக்டர். தன்மையான மனிதனாக, வலிகளைத் தாங்குகிற மனதுள்ளவனாக, அம்மாவை உயிருக்குயிராக நேசிக்கிறவனாக எளிமையான நடிப்பால் கவர்கிறார். தன்னை எதிரியாக நினைக்கும் ஆசிரியரின் மனதைக் குளிர்வித்து, வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்வது அவரது கதாபாத்திரத்தின் மதிப்பை உயர்த்துகிறது.

