ஜெய் கதாநாயகனாகவும், யோகிபாபு மிக முக்கியமான வேடத்திலும் நடிக்கும் படம் ‘ஒர்க்கர்.’
கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கிய வினய் கிருஷ்ணா இந்த படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் நாகிநீடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.
ரொமான்ஸ் ஆக்ஷன் திரில்லர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகும் இந்த படத்தின் தலைப்பை கடந்த மே 1 உழைப்பாளர் தினத்தில் படக்குழு அறிவித்தது.
படம் பற்றி இயக்குநர் வினய் கிருஷ்ணாவிடம் கேட்டபோது “முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், ரொமான்ஸ் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இதுவரை பார்த்திராத கற்பனை கதையாக சொல்வது இப்படத்தின் சிறப்பம்சம்.
ஹீரோ, ஹீரோயின் இடையிலான காதல் அந்த காதலுக்கு வரும் பிரச்சனைகளை ஆக்ஷன் திரில்லர் பாணியில் சொல்லியிருந்தாலும், வழக்கமான பாணியில் சொல்லாமல், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களால் யூகிக்க முடியாதபடி திரைக்கதை பல திருப்பங்களோடு பயணிக்கும். ஏன் இப்படி நடக்கிறது, இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பதை எந்த இடத்திலும் யாராலும் யூகிக்க முடியாது என்பது உறுதி.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்போம்.” என்றார்.
நான்கு பாடல்கள், ஐந்து சண்டைக்காட்சிகளோடு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, மைசூர், மங்களூர் ஆகிய பகுதிகளில் நடக்கவிருக்கிறது. படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

