சஸ்பென்சனில் இருக்கிற போலீஸ் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு, கொலை கேஸை ஒப்படைக்கிற பழகிப் போன கதைகளின் வரிசையில் மற்றொரு படம். குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசிவரை தக்க வைத்திருக்கிற திரைக்கதையோடு ‘வல்லான்.’
கிறிஸ்தவ மதபோதகர் ஒருவரின் மருமகன் முகமும் உடலும் சிதைத்துக் கொல்லப்படுகிறார். அந்த குற்றத்தை செய்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு, உயரதிகாரியை அடித்ததால் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிற திவாகருக்கு வழங்கப்படுகிறது. தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் காணாமல் போனதற்கும் ந்டந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றவே விசாரணையை தீவிரப்படுத்துகிறார் திவாகர். அந்த விசாரணையில் அவரிடம் சிக்குகிற குற்றவாளி யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது கதையின் கிளைமாக்ஸ்…
திவாகராக சுந்தர் சி. மனைவியாகப் போகிறவர் காணாமல் போன மன வேதனையை முகத்தில் பிரதிபலித்தபடி, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை பொருத்தமான கம்பீரத்துடன் செய்திருக்கிறார்.
தன்னை பெண் பார்க்க வரும் சுந்தர் சி யிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அவரது விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் தருணத்தையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார் தான்யா ஹோப்.
படத்தின் இன்னொரு ஹீரோயினாகியிருக்கிற ஹெபா படேல் கவர்ச்சியான உடைகளில் சுற்றித் திரிகிறார்; வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஹீரோவோடு சேர்ந்து துப்பு துலக்குவதில் துணை நிற்கிறார்.
கொல்லப்படுகிற நபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாசலம், மதபோதகராக ஜெயக்குமார், அவர் வீட்டுப் பணிப்பெண்ணாக சாந்தினி தமிழரசன் என மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அவர்கள் அதை உணர்ந்து நடித்திருக்க, சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை கதையின் நகர்வில் சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கதைக்களம் வழக்கமானதுதான் என்றாலும் என்றாலும் நடந்த குற்றத்திற்கான பின்னணி பரபரப்புக்கு உதவியிருக்க, காட்சிகளின் நீளத்தைக் குறைத்து படத்தை சோர்வின்றி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் மணி சேயோன்.

