முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான ‘ஆலி’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
மலையாளத் திரையுலகில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அதே நேரத்தில், இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில் படங்கள் உருவாகின்றன. புதிய பார்வையிலும், புதுவிதமான கதைக் களங்களிலும் பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. புதிய திசையிலான பாய்ச்சலில் மலையாளப் படங்கள் பெரிய வெற்றிகளைக் குவித்து வருகின்றன. அந்த வரிசையில் இணையும் ஒரு புதிய முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மலையாளப் படக் குழுவினர் இணைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. அங்கு வாழும் ஒரு இளம் ஜோடியின் கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. பெண்களின் வாழ்வியல் மற்றும் உணர்வுகளைப் பேசுகிறது. குடும்ப உறவுகள் மற்றும் குடும்பப் பின்னணிகளைப் படம் விரிவாகக் காட்டுகிறது. சமுதாயத்தில் உள்ள மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை இக்கதை தொட்டுச் செல்கிறது. வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மிகவும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் படமாக இது இருக்கும்.
கதையின் நாயகிக்கு நடைபெறும் திருமணம் தான் இக்கதையின் முக்கியப் புள்ளியாகும். மதம் மற்றும் ஜாதியைக் கடந்து இந்தத் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் திருமணச் சூழல்தான் படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரவின் என்பவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் முக்கியப் பாத்திரத்தை ஏற்றுள்ளார். கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜிக் குமார், செராய் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோமி, மன்சாட், ஜிலா, சுரேஷ் திருவல்லா ஆகியோரும் படத்தில் பங்களித்துள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் என்பவர் எழுதி இயக்கி, பாடல்களையும் எழுதியுள்ளார். முன்ஹர் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சினோஜ் பி.ஆர். ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை அபூ ஜியாத் மேற்கொண்டுள்ளார். ராம் கோபாலகிருஷ்ணன், சுரேஷ் ரத்தீஷ் ராய், ஆர்.ஆர்.பிரகாஷ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஜாக்கர் பார்வதி என்பவரும் இந்த இசையமைப்பாளர்கள் குழுவில் இணைந்துள்ளார். அரபிப் பாடகர் ஹஸன் மற்றும் ஹிந்திப் பாடகர் சல்மான் ஆகியோர் பாடியுள்ளனர். அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் ஆகியோரும் பாடியுள்ளனர்.
பாடல்களுக்கு ரத்தீஷ் ராய் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார். ஒலிவடிவமைப்பு பணிகளை என்.ஜெயதேவன் மற்றும் டி.ஐ.சஜீத் குமார் செய்துள்ளனர். நடனக் காட்சிகளை அதுல் ராமகிருஷ்ணன் மற்றும் சுஜிதா கோபால் ராய் அமைத்துள்ளனர். கலை இயக்கத்தை அகிலேஷ் மற்றும் விஜய் அபால்தாஸ் ஆகிய இருவரும் கவனித்துள்ளனர். தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராக ஸ்ரீகத் பணியாற்றியுள்ளார்.

