நாயகன் சஞ்சய் விஸ்வநாத் தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர்; கோடிகளில் புரள்பவர், சொந்த விமானத்தில் நாடு நாடாக சுற்றிக் கொண்டிருப்பவர். சொடக்கு போட்டால் போதும்; நினைத்ததை செய்து முடித்து விடலாம். அந்தளவுக்கு செல்வாக்குள்ளவர். துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்படிப்பட்ட அவருக்கு திருமண வாழ்க்கை மீது விருப்பமில்லை. அவரது அம்மாவுக்கு, தன் மகனுக்கு எப்படியாவது கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும்; அவருக்கு பிறக்கும் குழந்தையைக் கொஞ்சியபடி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிற எல்லா அம்மாக்களுக்கும் இருக்கிற நியாயமான ஆசை. அம்மாவுக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்.
பொதுவாக வாடகைத் தாயாக இருப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தை பெற்றுக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள். அதுதான் உலகம் முழுக்க இருக்கிற நடைமுறை. இந்த கதையில் அந்த வாடகைத் தாய்க்கு குழந்தை மீது பாசமும், குழந்தையின் தந்தையான விஸ்வநாத் மீது காதலும் உருவாகிறது.
விஸ்வநாத்துக்கு காதல், கல்யாணம் என்பதில் விருப்பமில்லை என்பது ஒரு பக்கம். அவருக்கு வயது 42; அவருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த பெண்ணுக்கு வயது 22. காதலை ஏற்க நினைத்தாலும் அவர்களுக்குள் இருக்கிற மிகப்பெரிய வயது வித்தியாசம் அவரை தடுக்கிறது. ஆனால், அது தனக்கு பிரச்சனையில்லை என்கிறார் அந்த பெண். விஸ்வநாத் சம்மதிக்க மறுக்கிறார்.
அந்த பெண் விடுவதாயில்லை; குழந்தைக்கு அம்மாவாக கூடவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். விஸ்வநாத், எதையும் எதிர்பார்க்க உனக்கு உரிமையில்லை என்று சொல்லி அவரை விட்டு விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறார். அந்த பெண் தனக்கு உரிமை இருக்கிறது என்று நீதிமன்றத்தை அணுகுகிறார். அதையடுத்து நடப்பதெல்லாம் விறுவிறுப்புதான், காமெடி கலகலப்புதான்.
விஸ்வநாத்தும் அந்த பெண்ணும் வாழ்க்கையில் இணைந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களத் தந்த வெங்கி அட்லூரி
விஸ்வநாத்தாக சூர்யா. படு ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார். நடிப்பில் கார்ப்பரேட் தொழிலதிபராக பணக்காரத்தனம் காட்டுகிறார். மனிதாபிமானமிக்கவராக, பாச நேசமிக்கவராக நடந்து கொள்கிறார். நடனத்தில் புத்துணர்ச்சி ததும்புகிறது.
ஏற்கனவே சில படங்களில் பார்த்த அதே கிறுக்குத்தன முகபாவங்களை இந்த படத்திலும் காட்டியிருக்கிறார் வாடகைத் தாயாக வருகிற மமிதா பைஜு. உணர்வுபூர்வமான காட்சிகளில் தனக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை நிரூபிக்கிறார்.
பல காட்சிகளில் ஜாலியாக, சில காட்சிகளில் சீரியஸாக என அனுபவ நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.
சுனில், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், நாசர், ஹர்ஸா செமூடு, காளி வெங்கட், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியான், தீபா சங்கர், மேத்யூ வர்கீஸ், ஸ்ரீஜாரவி, ரகுபாபு, செல்முருகன் என ஏராளமான நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கச்சிதமாக இருக்கிறது.
நிமிஷ் ரவியின் தரமான ஒளிப்பதிவு காட்சிகளின் பிரமாண்டத்தை உயர்த்திக் காட்ட, பின்னணி இசையை கதையோட்டத்தின் உணர்வுகளுக்கு ஏற்றபடி கொடுத்திருக்கும் ஜி வி பிரகாஷ் பாடல்களில் எனர்ஜியைக் கூட்டியிருக்கிறார்.
தாய்ப்பாசம், குடும்ப உறவுகளில் இருக்கிற சிக்கல்கள், வயது வித்தியாச காதல் – அதிலிருக்கிற பிரச்சனைகள், காமெடி கலாட்டாக்கள் என பலவற்றைக் கலந்து பரிமாறியிருக்கும் இந்த விஸ்வநாத் & சன்ஸ் மனநிறைவுக்கு உத்தரவாதம் தருகிறது.
Rating 3.5 / 5 

