கிரைம் திரில்லராய் வேகமெடுக்கும் திரைக்கதையில், பெண்கள் சந்திக்கும் அத்துமீறல்களை மையப்படுத்திய படைப்பு.
ஒரு தொழிற்சாலை, அதில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள், நான்கு இளம்பெண்களை காதலிக்கிறார்கள். அந்த நான்கு ஜோடிகளும் உற்சாகமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நான்கு பெண்களும் ஒரே தருணத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
அந்த வன்முறையில் யாரெல்லாம் ஈடுபட்டது என்பது அந்த பெண்களுக்கே தெரியாத நிலையில், நடந்தது என்ன, யாரெல்லாம் நடத்தியது என்பதை அடையாளம் காட்டுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்.
குற்றவாளிகள் யார், அவர்கள் எப்படி சிக்குகிறார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது கிளைமாக்ஸ்…
கதை நாயகிகளாக திருக்குறளி, தர்ஷினி, இந்து, சுபிக்ஷா… காதலர்களுடன் ஜாலியாக பேசி சிரித்துப் பழகும்போது அதற்கேற்ற புத்துணர்ச்சி, தங்களுக்குத் தெரியாமலே தவறு நடந்து கர்ப்பம் தரித்திருப்பதை அறியும்போது அதற்கேற்ற அதிர்ச்சி என காட்சிகளின் தேவைக்கேற்ப எளிமையான பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். நான்கு பேரில் திருக்குறளியின் மலர்ந்த புன்னகையும் உடைகளும் நடிப்பும் தனியாக தெரிகிறது.
நான்கு ஹீரோயின்களுக்கு ஜோடியாக கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் என நான்கு ஹீரோக்கள். பரவசம் பொங்க காதலிப்பது, ஆத்திரம் பொங்க குற்றவாளியைக் சுளுக்கெடுப்பது என தங்கள் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
நல்லவரா கெட்டவரா என யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் ‘அருவா சண்ட’ இசக்கிராஜாவின் பங்களிப்பு நேர்த்தி.
பெண்மை கலந்த உடல்மொழியோடு கண்களில் காமமும் சுமந்து தன் வில்லன் கேரக்டரை பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறார் பிரியராஜா.
ஜெ.கதிரின் பின்னணி இசையாலும் அரக்கோணம் யுவாவின் ஒளிப்பதிவாலும் படத்தின் தரம் கணிசமாக கூடியிருக்கிறது. பார்த்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்பது சலிப்பு தருகிறது.
பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு, திருப்பூர் தொழிற்சாலைகளில் நடக்கிற தான் கண்டறிந்த விபரீதங்களை இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமியின் திரைமொழியில் பார்க்கிறபோது மனம் கலங்குகிறது.
திருப்பூர் குருவி _ கழுகுப் பார்வை!
Rating 3 / 5

