மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுப்பூர்வமான தருணங்களை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த படைப்பாக உருவாகியுள்ள ‘தி ஒன்: வித்தின் யூ’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த இந்த படத்தை ஆதிரன் ராக்கெப்பன் இயக்குகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கை, விதி, சூழ்நிலை மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை இப்படம் சுவாரஸ்யமாக ஆராய்கிறது.
கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கவர் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க முடியாத இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. சிவராத்திரியன்று, முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது.
இப்படத்தில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் லிஜோமோல் ஜோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ”பருத்திவீரன்” சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர் மற்றும் ஸ்மிருதி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய திறமைகளும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
வித்தியாசமான கதைக்களம், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள், யதார்த்தமான பின்னணி மற்றும் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான திரைக்கதை ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை வழங்க முனைகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தங்களின் விதியை மாற்றும் சக்தி உள்ளது என்ற கருத்தை “தி ஒன் : வித்தின் யூ” படம் வலியுறுத்துகிறது.
தற்போது படக்குழு வெளியிட்டுள்ள டைட்டில் டீசர், “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் மர்மமும் தீவிரமும் நிறைந்த உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. டிராமா, சஸ்பென்ஸ், த்ரில், ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத தொடர்புகளால் நிரம்பிய இந்த டீசர், அந்த நான்கு மனிதர்களின் வாழ்க்கைகள் எவ்வாறு ஒரு மறக்க முடியாத இரவில் ஒன்றாக இணைகின்றன என்ற ஆவலை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். அவரது இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தின் காட்சியுலகை உயிர்ப்புடன் உருவாக்கியுள்ள நிலையில், எடிட்டர் சி.எஸ். பிரேம்குமார் சிக்கலான கதையமைப்பை மிக நேர்த்தியாக கட் செய்து காட்கிகளை திறமையாக வடிவமைத்துள்ளார். கலை இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால், ஆடியோகிராபர் எம்.ஆர். ராஜகிருஷ்ணன் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஏ. முத்துக்குமரன் ஆகியோரும் இணைந்து இத்திரைப்படத்திற்கு செழுமையான ஒரு சினிமா அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில்…

