ஒரு பெண்ணை அடைய மூன்று, நான்கு ஆண்கள் வட்டமிடும் கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் ‘தெரிஞ்சா காதலிங்க.’
சிறுமி பேச்சி (அஜன்யா) கிராமம் ஒன்றில் வசிக்கிறாள். அவளுக்கு தாத்தாவை தவிர அப்பா, அம்மா, சொந்த பந்தம் என யாரும் கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் பூப்பெய்துகிறாள். அந்த நிகழ்வை பேச்சியின் தோழி வீட்டார் எடுத்து நடத்துகிறார்கள். ஊரேகூடி பேச்சியை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறது.
அந்த விசேஷத்தில், ஊரிலுள்ள டீனேஜ் பருவத்தை தொட்டிருக்கிற ஒரு இளைஞனை தாய்மாமன் ஸ்தானத்தில் நிறுத்துகிறார்கள். அவன், பூப்புனித நீராட்டு விழாவில் தாய்மாமன் செய்கிற சம்பிரதாயங்களைச் செய்கிறான். அதனால் அவன் மீது அவளுக்கு ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. அவன் பேச்சி மீது காதல் வயப்படுகிறான். அதை லேசாக வெளிப்படுத்தவும் செய்கிறான். ஆனால், இருவரும் பேசிப் பழக வாய்ப்பில்லாமல், அவன் ஊரைவிட்டுப் போகிற சூழ்நிலை உருவாகிறது.
அந்த நேரமாகப் பார்த்து மலையிலிருந்து தவறி விழுந்து உயிருக்குப் போராடும் நிலையில், நாட்டு மருத்துவரான பேச்சியின் தாத்தாவிடம் வந்து சேர்ந்த ஒரு இளைஞன் சிகிச்சை பெற்று குணமாகிறான். குணமானவன் அங்கேயே தங்கி, தாத்தாவுக்கு உதவியாக வேலையில் இணைகிறான். அவனுக்கு சிகிச்சையளித்து, பேசிப் பழகியதன் காரணமாக பேச்சிக்கு அவன் மீது ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. அந்த இளைஞன் சாமியாராக தன்னை மாற்றிக் கொண்டிருப்பவன்; பிரம்மச்சாரியாக வாழ்ந்து ஆயுளை முடித்துக்கொள்ள தீர்மானித்திருப்பவன். அதனால் அவனுக்கு அவளது உணர்வுகள் புரியாது போகிறது.
அப்படியே சிலபல நாட்கள் கடந்த நிலையில் பேச்சிக்கு அந்த சாமியாரோடும் இன்னும் இரண்டு இளைஞர்களுடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. அந்த சூழ்நிலையால் ஒருசில விபரீதங்கள் அரங்கேறுகின்றன. எல்லாவற்றையும் கடந்து பேச்சிக்கு கல்யாணம் நடக்கிறது. யாருடன் நடக்கிறது? அதற்குமுன் அவள் என்னென்ன விபரீதங்களை சந்திக்கிறாள் என்பது இந்த படத்தின் பரபரப்பான எபிசோடுகள்…
பேச்சியாக அஜன்யா. கதாபாத்திரப்படி பார்த்தால் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத வயது. தோற்றத்திலும் சிறுமியாகவே இருக்கிறார். அவரை அடைய வட்டமிட்டு திட்டமிடுபவர்களை போக்ஸோவில் கைது செய்யலாம். கதையாக பார்த்தால் அந்த சிறுமியை நான்கைந்து பேருடன் பழக விட்டிருக்கும் இயக்குநர் மனசாட்சி இல்லாதவர் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நடிப்பாக பார்த்தால் ஒல்லிப்பிச்சானாக இருக்கும் அவர் எது காதல் எது இனக்கவர்ச்சி என்ற புரிதல் இல்லாமல் தவிக்கும்போது கில்லியாக வெளிப்படுகிறார். வெட்கம், கோபம், பாசம் என மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கொஞ்சம் அதிகமாக நடிப்பது போலிருக்கிறது. பாடலொன்றில் கவர்ச்சியாக நடனமாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
பேச்சியின் அன்பால் அழகால் சாமியாராகும் எண்ணத்திலிருந்து விலகுபவர், பேச்சியின் மனதில் என்ன இருக்கிறது என புரியாமல் ஒரு தலையாக காதலிப்பவர், கிராமத்துப் பேச்சியை மாடர்ன் மங்கையாக மாற்றுபவர் என மூன்று இளைஞர்கள். அந்த துடிப்பான பாத்திரங்களில் கிரண், விபின் சாதுல்பிரான் மூவரின் நடிப்பு இயல்பாகவும் இருக்கிறது; உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் வருகிற மீசை வெள்ளைப்பாண்டி, மைக்கேல்ராஜ், பி ஆர் கண்ணன் உள்ளிட்டோர் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
படத்தில் பூப்பெய்திய மகிழ்ச்சிக்கு, காதல் பரவசத்துக்கு, நண்பர்கள் ஆடிப்பாடும் உற்சாக தருணத்துக்கு, குத்தாட்டத்துக்கு என நான்கைந்து பாடல்கள் அணிவகுக்க, அதனதன் தேவைக்கேற்ப இசை பங்களிப்பை வழங்கியிருக்கிற சி எம் மகேந்திரா, சீரியஸான காட்சிகளுக்கு பின்னணி இசையால் அதிர்வலை உருவாக்கவும் தவறவில்லை.
தேனி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் கதை நிகழ்விடங்களாக அமைந்திருக்க அங்கெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் அழகை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் கோல்டு சந்துரு.
இத்தனை கனமான கதைக்கு சிறுமி பருவத்தில் இருக்கிற பெண்ணை நாயகியாக்கியிருப்பது பொருத்தமில்லை என்று தோன்றத்தான் செய்கிறது. அதையெல்லாம் தாண்டி, இந்த கதை மூலம் காதல் விஷயத்தில் உணர்ச்சியை ஓரம் வைத்துவிட்டு உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பதால் இயக்குநர் எம் கஜேந்திரனை பாராட்டுவது அவசியமாகிறது!
Rating 3 / 5


