ஜெயகாந்தன் ரெங்கசாமி இயக்கியுள்ள ‘திருப்பூர் குருவி’ திரைப்படம் வரும் மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் பிரபல இயக்குநர் வி.சேகர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமி, “நான் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன். மற்றொரு படம் எடுத்து தயாராக வைத்திருக்கிறேன், வெளியாகவில்லை. நான் திருப்பூரில் பணியாற்றிய போது அங்கு நடக்கும் சில சம்பவங்களை கவனித்திருக்கிறேன். அவற்றை மக்களிடம் சொல்ல வேண்டும், என்று அப்போதே எனக்கு தோன்றியது. பிறகு நான் இயக்குநர் ஆன பிறகும் அந்த கதையை எடுக்கவில்லை. என்னுடைய முந்தைய படம் வெளியாகவில்லை, அடுத்து ஒரு பண்ணலாம் என்று முடிவு செய்த போது, திருப்பூரில் நடந்த கதையை பண்ணலாம் என்று தோன்றியது. உடனே தொடங்கி விட்டேன்.
ஆரம்பம் முதல் எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். அவர்களின் உதவியினால் தான் இந்த படம் ரிலீஸ் வரை வந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இது திருப்பூரில் நடந்த உண்மை சம்பவம் தான். இதுபோல் அங்கு ஏராளமான சம்பவங்கள் நடக்கிறது. ஆனால், அவற்றை சொல்ல வேண்டுமானால் கமர்ஷியலாக சொல்ல வேண்டும், பட்ஜெட் அதிகம் தேவைப்படும் என்பதால், ஒரு சிறிய விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு செய்திருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு தான் எடுத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “சிறிய அளவில், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள். 10 நாட்களில் ஒரு படம் முடிப்பது என்பது பெரிய விசயம். அதை இந்த குழுவினர் செய்திருக்கிறார்கள். இயக்குநரும் தனக்கு எது தேவை, என்ன சொல்லப் போகிறோம், என்பதில் மிக தெளிவாக இருந்து படத்தை முடித்திருக்கிறார். இதுபோன்ற சிறிய படங்களுக்கு தயாரிப்பாளர்களே பத்திரிகையாளர்கள் தான். அவர்கள் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
படம் முடிந்த பிறகு நடிகர், நடிகைகள் தனியாக சென்று விடுகிறார்கள், இயக்குநரும், தயாரிப்பாளரும் மட்டும் அந்த படத்தை வெளியிட்ட பிறகும் உழைக்கிறார்கள். அப்படி இல்லாமல், படம் வெளியான பிறகும், இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஒற்றுமையாக இருந்து படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆளுக்கு இரண்டு ஏரியாக்களை எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் மக்களிடம் உங்கள் படத்தை நேரடியாக கொண்டு சேருங்கள். நோட்டீஸ் கொடுங்கள், மாட்டு வண்டியில் பேனர் கட்டுங்கள். எதில் எல்லாம் குறைவான செலவு இருக்கிறதோ அதை எல்லாம் வித்தியாசமான முறையில் செய்து, இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.