ஒரு குற்றமும் செய்யாதவன் சிறைக்குச் சென்று பல குறறங்களைச் செய்கிற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிற கதை.
தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்திருக்கிற பார்த்திபன், பொய்யான கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறை தண்டனைக்கு ஆளாகிறான். அவனை, சிறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற தாதா சிகாவின் ஆட்டத்தை அடக்குவதற்கு கருவியாக பயன்படுத்த முயற்சிக்கிறார் சிறைத்துறை உயரதிகாரி. அவர் சொல்வதைக் கேட்டால், பார்த்திபன் சிறை தண்டனையிலிருந்து விடுபடும் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்தும்போது சிறைக்குள் பெரும் கலவரம் வெடிக்கிறது.
கலவரத்தில் ஈடுபடும் கைதிகளை அடக்க களமிறங்கும் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு மரணமடைகிறார்கள். சிறை வளாகம் முழுக்க பிணங்கள்…
கலவரம் ஏன் உருவானது? பார்த்திபன் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது எந்த காட்சியிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத திரைக்கதை.
பார்த்திபனாக ஆர் ஜே பாலாஜி. ஜாலி கேலி நக்கல் நையாண்டி என தனக்கான அத்தனை அடையாளங்களையும் தூக்கிப்போட்டு விட்டு வேறொரு நபராக நிற்கும் அவர், கைதிகளுடன் சண்டையிட்டு ரத்தம் வழிய வழிய வலியால் துடித்துக் கதறும் அப்பாவியாக ஒரு முகம், சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலைகள் செய்து சிறைக்கே தாதாவாக மாறுகிற இன்னொரு முகம் என கடந்தோடும் காட்சிகளில் காட்டியிருக்கும் பொருத்தமான வேறுபாட்டுக்கு பாஸ்மார்க் போடலாம்.
சிகாவாக செல்வராகவன். உலகமகா தாதா என்கிற ரேஞ்சுக்கு அவருக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்கள். அதற்கேற்ற காட்சிகள் இல்லாதது குறையாக இருந்தாலும் அவர் வருகிற காட்சிகளில் காட்டும் கெத்து படத்துக்கு சத்து!
ஆர் ஜே பாலாஜியின் காதலியாக சானியா ஐயப்பன், சிறையின் உயரதிகாரியாக ஷராபுதீன், சிறை அதிகாரியாக கருணாஸ், சிறைக்கூட சமையலறை தலைவராக இயக்குநர் பாலாஜி சக்திவேல், கைதிகளின் உரிமைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற (சீலன்) எழுத்தாளர் ஷோபா சக்தி, சிறையில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதியாக நட்டி நட்ராஜ் என மற்றவர்களின் நடிப்பும்,
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை, பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு, கலை இயக்குநர் எஸ்.ஜெயசந்திரனின் தரமான உழைப்பும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
1999 காலகட்டத்தில் சென்னை மத்திய சிறையில் ஜெயிலர் நடந்த பெருங்கலவரத்தை மையப்படுத்தி,
சிறை வாழ்க்கையென்பது குற்றவாளிகள் திருந்துவதற்கான இடமாக இல்லை என்கிற கோணத்தில் திரைக்கதை அமைத்திருக்கிற அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்தின் மேக்கிங் நிச்சயமாய் மிரட்டல்!

