கதாநாயகன் அப்பா அம்மாவை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, படித்து ஆளாகி, நல்ல வேலையில் இருக்கிறான். அவனுக்கு ஒரு பெண் மீது கண்டதும் காதல் உருவாகிறது. அந்த பெண்ணும் அவனை காதலிக்க, உடனடியாக கல்யாணம், முதலிரவு என உற்சாக மூடுக்கு போகிறார்கள்.
அந்த பெண் மோசமான அமைச்சர் ஒருவரின் மகள். கதாநாயகன் அதை தெரிந்து கொள்ளாமல் அவளைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பணக்கார காதலன் இருக்கிறான். அவள் அவனிடமிருந்து பிரிந்து, கதாநாயகனை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள்.
கதை இப்படி தன் பயணத்தை துவங்க, மண வாழ்க்கையில் நுழைந்த அந்த ஜோடிக்கு அமைச்சர் மூலம் பிரச்சனை வரலாம்; முன்னாள் காதலன் மூலம் பிரச்சனை வரலாம் என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம். எதிர்பார்த்தபடியே பிரச்சனைகள் வருகிறது. எதிர்பாராத விதமாக, அந்த ஜோடியின் உடல் ரீதியிலான உறவு வீடியோவாக ஒரு தாதாவிடம் சிக்கிக் கொள்ள, எல்லாவற்றையும் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது மீதிக் கதை…
வருகிற காட்சிகள் அத்தனையிலும் பரபரப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. வில்லனை பழி வாங்க வேண்டியிருக்கிறது. காதலிப்பது உள்ளிட்ட ரெகுலர் டியூட்டியும் இருக்கிறது. அனைத்தையும் குறையின்றி நிறைவேற்றுகிறார் நாயகன் ஜெய்.
தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் வாழ்க்கையை பலி கொடுக்க தயாராகிவிட்ட அப்பாவிடமிருந்து தப்பிப்பது, தன் உணர்வை மதிக்காத காதலனிடமிருந்து விலகுவது, வில்லனை வேட்டையாட களமிறங்கிய கணவனுக்கு துணையாக நிற்பது என ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.
ஹோட்டல் அதிபதியாக வருகிற கருடா ராம் சைபர் குற்றவாளியாக மிரட்டியிருக்கிறார். யோகிபாபு, சத்யன், ஆதித்யா கதிர் என மற்றவர்களின் கதாபாத்திரங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கிறது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை கதையின் வேகத்துக்கு ஏற்றதாக இருக்க, காட்சிகளை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரிச்சர்ட் எம் நாதன்.
கிரைம் திரில்லர் கதைக்குள் காதல், காமெடி என ரசிகர்களுக்குப் பிடித்த அம்சங்களை இணைத்திருக்கும் இயக்குநர் பாபு விஜய் திரைக்கதையில் புதுமையாக சில விஷயங்களைச் சேர்த்திருந்தால் ‘சட்டென்று மாறுது வானிலை’ ரசிகர்களால் தியேட்டர்கள் நிரம்பியது என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கும்.
Rating 2.5 / 5

