திரையுலகம் காதல் கதைகளை விதவிதமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் எம் ஆர் பாரதி, கனவில் வந்த காதலி நேரில் வந்தால் எப்படியிருக்கும் என சிம்பிளாக யோசித்ததில் பிறந்திருக்கிறாள் ‘ட்ரீம் கேர்ள்.’
திரைப்படம் இயக்குவதற்கான திட்டமிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் கிடைத்து, படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார். அவர் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த அஞ்சலி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழக அது காதலாக மலர்கிறது. கிருஷ்ணாவை சந்திக்கும் முன் அஞ்சலி ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். அந்த காதலர் இப்போது கிருஷ்ணா – அஞ்சலி காதலுக்கு வில்லனாகிறார். அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்றாகிவிடுகிறது. அஞ்சலி விபத்தில் இறக்கிறாள் என்பதுதான் இந்த கதையிலிருக்கிற ஷாக்கான சமாச்சாரம்.
மேலே கதையாக சொன்னதில் ‘திரைப்படம் இயக்குவதற்கான திட்டமிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் கிடைத்து, படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார்’ என்பது வரைதான் நிஜம். மற்றதெல்லாம் கிருஷ்ணாவின் கனவில் நடந்தவை.
அப்படி நடந்த அனைத்தும் நிஜத்தில் நடக்க, அஞ்சலி விபத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது மிச்சசொச்ச கதை…
கிருஷ்ணாவாக வருகிற ஜீவாவுக்கு காதலில் துவங்கி எல்லா உணர்வுகளையும் உணர்ச்சி வசப்படுதல்களையும் இயல்பான நடிப்பில் கொண்டுவர முடிகிறது.
அஞ்சலியாக வருகிற ஹரிஷ்மிதா ஹீரோயினுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார். அணியும் உடைகளாலும் வசீகரப் புன்னகையாலும் எளிய நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார்.
ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாத காதல் கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கும் இளமாறன் பாடல்களில் தென்றலின் இதத்தை பரவச் செய்கிறார்.
கதை நிகழும் ஊட்டியின் அழகை தவழும் மேகங்களில் வளைந்து நெளிந்து பயணித்து பல மடங்காக்கிக் காட்டியிருக்கிறார் சாலமன் போவாஸ்.
மெல்லிய காதல் கதை, புதுமுகங்களாக இருந்தாலும் கதைக்குப் பொருத்தமான நடிகர், நடிகைகள், இடையிடையே கலகலப்புக்கான காட்சிகள், சஸ்பென்ஸ் திரில்லருக்கான விறுவிறுப்போடு கிளைமாக்ஸை நோக்கி நகர்த்திப் போகும் எம் டி தமிழரசன் குழுவினரின் திரைக்கதை உள்ளிட்டவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
பெரியளவில் எதிர்பார்ப்பின்றி போனால் ஒன்றரை மணி நேரம் ஓடி முடிகிற இந்த படத்தில் ரசிக்கும்படியான அம்சங்களை அனுபவித்து திரும்பலாம்.
Rating 3 / 5

