நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டியிருக்கிறார்.
அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த ஆலயத்தின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
ஆலய கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தள ஸ்டுடியோவையும் தொடங்குகிறார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.
ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே ‘பருத்திவீரன்’ சரவணன் என்றானது. அதன் பிறகு
ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.
அண்மையில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார்.

