அப்பா மகன் பாசத்தில் மற்றுமொரு கதையாக ‘ராஜபுத்திரன்.’
கதையின் நாயகன் வெற்றி சூழ்நிலை காரணமாக சட்டவிரோத வேலையில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு வேலை கொடுத்தவரே அவருக்கு எதிராக சதி செய்கிறார். அதை தெரிந்துகொண்ட வெற்றி தனது முதலாளியையும் அவரது கூட்டாளிகளையும் சட்டப்படி தண்டிக்க நினைக்கிறார்.
நினைத்ததை அவர் எப்படி செயல்படுத்துகிறார் என்பதும், அதில் அவர் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களின் தொகுப்புமே மீதிக்கதை…
இதுவரை கதைகளுக்கேற்ற நாயகனாய் பயணித்துக் கொண்டிருந்த வெற்றி ஆக்சன் ஹீரோவாக மாறி பொருத்தமாக நடித்திருக்கிறார். அப்பா மீது பாசம், அழகான பெண் மீது காதல் என மற்ற கடமைகளையும் குறையின்றி செய்திருக்கிறார்.
நாயகி கிருஷ்ணபிரியாவுக்கு காதல், பாசம் என உணர்வுகளையும் கோபம், பழிவாங்கல் என உணர்ச்சிகளையும் சரியானபடி டெலிவரி செய்யத் தெரிகிறது. அழகும் இளமையும் இருக்கிறது. அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் எதிர்காலம் கண்டிப்பாய் பிரகாசம்தான்.
இளைய திலகம் பிரபு செல்வ வளமும் செல்வாக்கு பலமும் வாய்ந்தவராக இருந்து வறுமைச் சூழலுக்குள் விழுந்தவராக, மகனை பூபோல் பொத்திப் பொத்தி வளர்க்கும் தந்தையாக, மகனுக்கு ஒரு பிரச்சனை எனும்போது பதறித் துடிப்பவராக, எதிராளிகளை எகிறியடிப்பவராக திரையை ஆளுமையாக நிரப்பியிருக்கிறார்.
பணபரிமாற்ற மோசடியில் ஈடுபடுகிற கோமல்குமாரின் வில்லத்தனத்திலிருக்கும் உருட்டல் மிரட்டலில் அலட்டல் அதிகம். துணை வில்லனாக லிவிங்ஸ்டன் பரவாயில்லை ரக பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
மற்றவர்களின் நடிப்பு கதைக்கேற்றபடி அமைந்திருக்க, அஸ்மிதா குத்தாட்டப் பாடலுக்கு குதூகலமாய் ஆடியிருக்கிறார்.
‘ஆகாசத்த தொட்டாச்சு’ பாடலில் கிறங்கடிக்கும் நெளபல் ராஜா பின்னணி இசையில் கணிசமான திருப்தி தருகிறார்.
1990 களில் நடக்கும் கதைக்கான உழைப்பை கச்சிதமாக தந்திருக்கிறார் கலை இயக்குநர் அய்யப்பன்.
வறட்சி பூமியான இராமநாதபுரம் ஆலிவர் டெனியின் கேமராவில் செழுமையாக தெரிகிறது.
ஒரு பக்கம் அப்பா _ மகன் பாசம், இன்னொரு பக்கம் அழகான காதல், மற்றொரு பக்கம் மினி கேங்ஸ்டர் கும்பல் என மசாலாவாக கதைக்களத்தை உருவாக்கிய இயக்குநர் மகா கந்தன், இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து திரைக்கதையை கட்டமைத்திருந்தால் ராஜ புத்திரனை வசூல் மன்னனாக்கியிருக்கலாம்.
Rating 3 / 5

