உழைப்பால் முன்னேறி தனது தொழிலை உலகம் முழுக்க விரிவுபடுத்தி வியக்க வைத்த ஒருவர், சபலத்தால் சரிந்த உண்மைக் கதை சிலபல மாறுதல்களுடன் ‘ராஜா கிளி’யாகியிருக்கிறது.
கதையின் நாயகன் முருகப்ப சென்றாயராக தம்பி ராமையா. அவர் எப்படியெல்லாம் உழைத்து முன்னேறினார் என்பதை காண்பிக்காமல், பெரிய தொழிலதிபராக அதற்கான கெத்துடன் வலம் வரும் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது.
மனைவி, குழந்தைகள் என மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் சூழலில், முருகப்பருக்கு ஒரு இளவயதுப் பெண் மீது கிறக்கம் ஏற்படுகிறது; அவரை துணைவியாக்கிக் கொள்கிறார்.
கொஞ்ச காலம் போனதும் இன்னொரு சிறு வயதுப் பெண்ணுடன் தொடர்பு உருவாகி, ஆடிப் பாடி குதூகலமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அந்த குதூகலம் ஒரு கட்டத்தில் அவருக்கு குழி பறிக்கிறது. கொலை வழக்கில் சிக்கி சிறை செல்கிறார். அதன் பின்னர் இன்னும் பல சோதனைகளும் அவரை சூழ்கிறது.
அதற்கான பின்னணியை விளக்குகிறது படத்தின் மிச்சமீதிக் கதை… அப்பா தம்பி ராமையாவை கதை நாயகனாக்கி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா.
பந்தாவான பணக்காரர், மனநலம் பாதிக்கப்பட்டு குப்பைக் குவியல்களிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டவர் என இருவேறு தோற்றங்களில் வந்து நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கும் தம்பி ராமையா, சபலம் தலைக்கேறி கிளுகிளுப்பாக நடந்துகொள்வதை ரசித்துச் செய்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் வாழ்வில் இரண்டாவதாக இணைகிற சுபா முகபாவங்களில் கவர்ச்சி காட்ட, மூன்றாவதாக இணைகிற ஸ்வேதா ஆடைக் குறைப்பில் அதகளம் செய்திருக்கிறார்.
கதைநாயகனின் மனைவியாக தீபா சங்கரின் நடிப்பில் ஸ்பெஷலாக ஏதுமில்லை; சிறிய வேடமென்றாலும் உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார் சமுத்திரகனி.
திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழக்கறிஞராக வந்தாலும் புலனாய்வு அதிகாரி போல் மாறி ஏற்ற பாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி, பழ கருப்பையா, பிச்சைக்காரன் மூர்த்தி, டேனியல் அனி போப் என நிறையப் பேர் நிறைவாக நடித்திருக்க, தம்பி ராமையாவின் இசையில் சின்னமுள்ளு பெரியமுள்ளு பாடல் இளமை விருந்தாக உருவாகி கிறங்கடிக்கிறது.
சபலம் சகஜமானதுதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆப்பு நிச்சயம் என எடுத்துக் காட்டிய ராஜா கிளி படம் வடிவில் ஊர் உலகத்துக்கான பாடமாக மாறியிருக்கிறது.
Rating 3.5 / 5

