மூத்த பத்திரிகையாளர் கவிதா தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ராபர்.’
கிராமத்திலிருந்து சென்னைக்கு போகும் இளைஞன், அங்குள்ளவர்களைப் போல் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடத் தொடங்குகிறான். அதன் விளைவுகளே ‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் படத்தின் கதை.
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.
ஊடகத்துறையில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றும் கவிதா தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். அவரிடம் பேசியபோது “உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.
படப்பிடிப்பு சென்னை தி நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.
இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.
நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும் படி இந்தப் படம் அமைந்திருக்கும். பெற்றோர்கள் பெண் குழந்தைகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்’கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இப்போது இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது” என்றார்.
இந்த படத்தின் ஹீரோ சத்யா ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டவர். தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.
தயாரிப்பாளர் கவிதா பற்றி:-
ஊடகத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.
‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். அதை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது U1 ரெகார்ட் மூலம் வெளியிட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து ‘தாத்தா’ என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

