தமிழ்நாட்டில் சாதி சார்ந்தும் அரசியல் களம் சார்ந்தும் பிரபலமானவர் ‘காடுவெட்டி’ குரு. அவர் மீதான சர்ச்சைகளைத் தவிர்த்து அவர் மக்களின் பாதுகாவலனாக களமாடிய தருணங்களை, சதிகார நிறுவனங்களால் பறிக்கப்பட்ட நமது மண்ணின் வளங்களை மீட்பதற்காக களமிறங்கிப் போராடிய சம்பவங்களை, பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ’வாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததை, குடும்பப் பின்னணியை என பலவற்றைத் தொகுத்து வரலாற்று ஆவணமாக்கியிருக்கிற படம்.
குருவாக இயக்குநர் வ. கெளதமன். தன் மண்ணைச் சார்ந்த பெண் மீது கை வைத்தவர்களை கொன்றழிப்பதாகட்டும், மக்கள் நலனுக்காக போராட்டங்களில் காட்டும் வீரமாகட்டும், ஏழை எளிய மக்களின் தேவையறிந்து உதவுவதாகட்டும், பலகோடி ரூபாயைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தும் விலைபோகாமல் மன உறுதியைக் கடைப்பிடிப்பதாகட்டும் பொருத்தமான நடிப்பைத் தந்து, சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
இளவயது குருவாக வருகிற தமிழ் கெளதமன், தன் அப்பாவை கொன்றவனை பழி தீர்க்கும் காட்சி சிலிர்ப்பூட்டுகிறது.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற பாகுபலி பிரபாகர் குருவை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு முறைப்பும் விரைப்புமாய் நடமாடி கடமையாற்றியிருக்கிறார்.
அப்பாவாக சமுத்திரகனி, கொஞ்ச நேரமே வந்தாலும் கதையில் பெரியளவில் முக்கியத்துவம் இருக்கிறது.
ஊரில் பெரிய மனிதர், கொலை வெறி பிடித்தவர் என உருவாக்கப்பட்ட கேரக்டரில் அராஜகத்தை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆடுகளம் நரேன்.
குருவின் மனைவியாக வருகிற புஜிதா பொன்னாடா தோற்றத்தாலும் அழகாலும் மனம் நிறைக்கிறார்.
குருவின் அம்மாவாக வருகிற சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு நெகிழ வைக்கிறது.
கதையின் நகர்வுக்குப் பொருந்திப் போகிற பாடல்கள் ஜீ வி பிரகாஷ் இசையில் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையால் கதையோட்டத்திற்கு எனர்ஜி ஏற்றியிருக்கிறார் சாம் சி எஸ்.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
தனக்காக மட்டுமே வாழ்கிறவர்கள் மத்தியில் தன்னைச் சார்ந்த மக்களுக்காக வாழ்ந்தவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லும் படைப்புகள் வரவேற்புக்குரியவை; அந்த வரிசையில் காடு வெட்டி குருவின் வாழ்வியல் பயணத்திலிருந்து கொண்டாடத்தக்க அம்சங்களை எடுத்துக் கொண்டு, சினிமாவின் தேவைக்கேற்ப கற்பனை கலந்து மண்மணம் மாறாமல் வ கெளதமன் இயக்கியிருக்கும் இந்த படைப்பும் வரவேற்புக்குரியது.
ஆவணப் படம் போலில்லாமல் கமர்ஷியல் படைப்பாக இருப்பதால் குறிப்பிட்ட சாதியினர், கட்சியினர் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்க்கலாம் என்பது அண்டர்லைனில் குறிப்பிடவேண்டிய செய்தி!
Rating 3 / 5

