விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியை பழிவாங்கல், வன்முறை, ரத்தச்சகதி என சுற்றிச்சுழலும் அக்ஷன் அதிரடி கதைக்களத்தில் கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கும் படம்.
சூர்யா ஆளுங்கட்சி எம் எல் ஏ ஒருவரை பகல் நேரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்கிறார். கொன்ற சூர்யாவுக்கு 17 வயது என்பதால் வழக்கமான சிறைச்சாலைக்கு அனுப்பாமல் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார். அங்கு அவரை சிலர் தாக்க முயற்சி செய்கிறார்கள். சூர்யா அவர்களை அடித்து துவைக்கிறார். மீண்டும் ஒரு கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்த தயாராகிறது. அந்த கும்பலையும் வெளுத்து வாங்குகிறார்…
கதை இப்படி தாக்குதல் மயமாக போய்க் கொண்டிருக்க இடைவேளைக்குப் பிறகு, சூர்யா எம் எல் ஏ வை கொன்றது ஏன்? சிறையில் அவரை போட்டுத்தள்ள நினைப்பது யார் என்பதையெல்லாம் விவரித்து பரபரப்பூட்டுகிறார் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநரும் இந்த படத்தை முதல் படமாக இயக்கியிருக்கும் அனல் அரசு.
சூர்யாவாக சூர்யா சேதுபதி. ஆக்ஷன் காட்சிகளுக்கு பொருந்தும்படியான உடற்தகுதியுடன் இருக்கிற அவரது முகத்தில் சற்றே முரட்டுத்தனம் தெரிகிறது. கதைப்படி அவர் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரரும் கூட. அந்த தகுதிகளுடனும் திறமையுடனும் சண்டைக் காட்சிகளில் மாஸ் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு அசுரத்தனமாய் பாய்ந்து தெறிக்க விடுகிறார். இடைவேளை வரை வசனம் எதுவும் பேசாமல் ஆக்சனிலேயே முடித்துக் கொள்பவர், கிளைமாக்ஸின் நெருக்கத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு அதுஇதுவென தங்கள் சமூகத்தினருக்கு நேர்கிற கொடுமைகள் பற்றி கோபம் கொப்பளிக்க தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். மற்ற உணர்வுகளை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என புரிந்து கொள்ள காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
சூர்யாவுக்கு அண்ணனாக வருகிற ‘காக்கா முட்டை’ விக்னேஷ், காதல், மோதல், இழப்புகளைச் சந்தித்தல் என கனமான பங்களிப்பைத் தந்து நகர்கிறார்.
ஏன் என்றே தெரியவில்லை, அபி நட்சத்திராவை எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான பாதிப்புக்கு ஆளாகிறவராகவே பயன்படுத்துகிறார்கள். இதிலும் அப்படியே பாதிக்கப்படுகிறார். நடிப்புப் பங்களிப்பில் தேவையான உணர்வை சரியாக கடத்தியிருக்கிறார்.
எம் எல் ஏவாக வருகிற சம்பத் ராஜின் வில்லத்தனம் கெத்தாக இருக்கிறது. அவரது மனைவியாக வருகிற வரலெஷ்மி சரத்குமார், கணவனை கொன்றவனை பழிவாங்க வேண்டும் என்ற வெறி சுமந்து அலைவதில் ஏற்கனவே சில படங்களில் பரிமாறிய நடிப்பைத் தந்திருக்கிறார்.
முன்னாள் எம்.எல்.ஏவாக வரும் முத்துக்குமார், எம் எல் ஏ கொலை செய்யப்படும்போது போடும் குஷியான ஆட்டத்தால் கவனிக்க வைக்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி, ஜெயிலராக வேல்ராஜ், விசாரணை அதிகாரியாக ஹரிஷ் உத்தமன், மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக தீலிபன் ஆகியோருடன் மூணாறு ரமேஷ், ஆடுகளம் நரேன், அஜய் கோஷ், ஸ்ரீஜித் ரவி, ஆடுகளம் முருகதாஸ் என பழக்கப்பட்ட நடிகர்களின் அணிவகுப்பு பெரிதாக இருக்கிறது.
வேல்ராஜின் ஒளிப்பதிவு தரம். சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை மிரட்டலான அக்சன் காட்சிகளுக்கு வெறியூட்டுவது போலிருக்கிறது.
கொலை, பழி வாங்கல் என பல படங்களில் பார்த்துப் பழகிய விஷயங்களை கலந்துகட்டி தனது சண்டைப் பயிற்சி திறமையை காட்சிகளில் நிரப்பியிருக்கும் அனல் அரசு, கதை, திரைக்கதையில் புதிய விஷயங்களை புகுத்தியிருந்தால் பீனிக்ஸின் பாய்ச்சல் பலமாக இருந்திருக்கும்.

