நடிகர் ஒருவர், இயக்குநராகும் லட்சியத்தில் இருக்கிற ருத்ரா என்ற இளைஞரிடம் கதை கேட்கிறார். அவர் சொல்லும் கதைகளில் ஒன்று அவருடைய சொந்த கதை; காதல் கதை. அந்த கதையில் காதலி அவரை விட்டுப் பிரிகிறார். அதுவரை கதையை சொல்லி முடிக்கிறார்.
கதையை கேட்டுக் கொண்ட நடிகர், ருத்ரா பிரிந்த அந்த காதலியை சந்தித்து விட்டு வா. சந்தித்தபின் என்னவெல்லாம் நடக்கிறதோ அதையும் சேர்த்து கதையை விறுவிறுப்பாக்கலாம் என்கிறார்.
ருத்ரா பிரிந்த காதலியை சந்திக்க புறப்படுகிறார். அவர் காதலியை எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார்? சந்தித்தபின் என்னவெல்லாம் நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் கிடைக்கிற பதில்கள் சுவாரஸ்யம்.
ருத்ரா (விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர்) படம் இயக்கும் ஆர்வத்தில் இருப்பது, கதை சொல்லும்போது உணர்வுகளுடன் அதை வெளிப்படுத்துவது, சொல்கிற கதையில் அவரே கதாநாயகனாக நடிக்கும்போது காதல், மோதல், கோபம், பரிதாபம் என அத்தனை உணர்வுகளையும் பாஸ்மார்க் கொடுத்துப் பாராட்டும் விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடிகராக வருகிற விஷ்ணு விஷால் தம்பிக்கு திரையின் பெரும்பகுதியை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, கதை கேட்பதும் அதில் இது அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என கருத்துக்களைப் பகிர்வதுமாய் தனது கடமையை முடித்துக் கொள்கிறார்.
காதலியாக வருகிற மிதிலா பால்கர் விதவிதமான உணர்வுகளை பிரதிபலிப்பதில் இருக்கும் தேர்ச்சி படத்தின் பலம்.
இயக்குநராகவே வருகிற இயக்குநர் மிஷ்கின், கீதா கைலாசம், கருணாகரன், கஸ்தூரி என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பில் நேர்த்தி தெரிகிறது.
கோவா அதுஇதுவென உற்சாகம் புரளும் பகுதிகள் கதை நடக்கும் இடங்களாக இருக்க தன் ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி தந்திருக்கிறார் ஹரிஷ் கண்ணன்.
ஜென் மார்ட்டின் இசை கதையோட்டத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது.
காதல், மோதல், பிரிவு என இந்த தலைமுறை ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக்கொள்ளும் விஷயங்களை மையப்படுத்தி, உணர்வுபூர்வமான படைப்பாக்கி இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் (5 ஸ்டார் கிருஷ்ணா என அறியப்படுகிற) கிருஷ்ணகுமார் ராமகுமார்.

