‘பிக் பாஸ்’ ஜனனி கதையின் பாஸாக வலுவான கேரக்டரில் நடித்திருக்கும் படம்.
ஆரம்பக் காட்சிகளில் மர்ம மனிதனால் ஒரு இளைஞன் தாக்கப்பட அவன் இறந்திருப்பான் என நினைக்கிறோம். அடுத்தடுத்தும் அதே போல் இரண்டு பேர் தாக்கப்பட, ஒரு கட்டத்தில் அந்த மர்ம மனிதன் ஜனனி என்பது தெரிகிறது. ஜனனிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது அதிர்ச்சியளிக்கும் ஃபிளாஷ்பேக்காக இருக்க, தாக்குதலுக்கு ஆளான மூவரும் உயிர் பிழைத்து வந்து ஜனனியை ஒழித்துக் கட்ட திட்டமிட ஸ்க்ரீன்பிளே சூடுபிடிக்கிறது.
ஜனனியின் சிரிப்பைப் பார்த்தால் குழந்தை போலிருக்கிறது. கொலைவெறித் தாக்குதல் நடத்தும்போது அந்த முகத்தில் ஆக்ரோஷத்தை பிரதிபலித்து மிரட்டுகிறார். சகோதரி மீது பாசம், அப்பா அம்மா மீது நேசம், காதலனுடன் உற்சாகம் என எல்லாவற்றிலும் உயிரோட்டமிருக்கிறது.
தன் காதலி குறி வைத்த குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்க தன் போலீஸ் அதிகாரத்தைக் காட்டுவதும் அதற்கு பலனில்லாமல் போக சட்டத்தை கையில் எடுப்பதுமாக விஸாகன் எளிமையான நடிப்பைத் தந்திருக்கிறார்.
வழக்கறிஞராக வருகிற கெளசிக் இரண்டாவது ஹீரோவாக பொருத்தமான நடிப்பைத் தந்து கதையுடன் கலந்திருக்கிறார். ஜனனியின் தோழியாக வருகிற திவ்யா கிருஷ்ணன் நடக்கும் பரபரப்பான சம்பவங்களில் உடனிருந்து சுறுசுறுப்பான நடிப்பால் பலம் சேர்க்கிறார்.
ரமேஷ் கண்ணா, சபீதா ஆனந்த், அபிஷேக், சிவன் சீனிவாசன் என மற்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடித்திருக்க, அபுபக்கரின் பின்னணி இசை கதையின் வேகப் பாய்ச்சலுக்கு ஊக்கம் தந்து பயணிக்கிறது. மோகன்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு நல்ல மைலேஜ் தருகிறது.
பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு பழிவாங்க பெண்ணே களமிறங்கினால் அதன் வீரியம் எப்படியிருக்கும் என்கிற விறுவிறுப்பான கதைக்கு கமர்ஷியல் மசாலைவை அளவாக கலந்து நிழலுக்கு வெளிச்சம் தந்திருக்கிறார் இயக்குநர் ஏ கே குமார்!
Rating 3 / 5

