இளைஞன் வெற்றி தொடர்ச்சியாக மூன்று கொலைகள் செய்துவிட்டு இன்னொரு கொலை செய்யப் போவதாக போலீஸுக்கு தகவல் கொடுக்கிறான். ஏற்கனவே நடந்த கொலைகளைச் செய்தது யார் என்பதை தேடிக் கொண்டிருக்கும் போலீஸுக்கு, அடுத்து ஒரு கொலை நடக்கப் போகிறது என்ற தகவலால் தலைவலி அதிகரிக்கிறது.
நடக்கப் போகும் கொலையை தடுத்து, கொலைகாரனை பிடிக்க போலீஸ் ஸ்கெட்ச் போடுகிறது.
கொலைகளைச் செய்வது வெற்றி என்பதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது பரபரப்பான காட்சிகளாக கடந்தோட, வெற்றியால் திட்டமிட்ட கொலையை செய்ய முடிந்ததா இல்லையா என்பது கதையின் மிச்சசொச்சம்.
கொலைகளுக்கான காரணம் அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என தமிழ் சினிமா டெம்ப்ளேட்டை மனதில் வைத்து ஒன்றிரண்டை யூகித்தால் அதில் ஒன்றாகவே இருக்கிறது.
வெற்றியாக சேத்தன் சீனு. முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மீது அன்பு செலுத்திக் கொண்டு கொலைகள் செய்கிற கேரக்டர். யாரையெல்லாம் அவர் கொலை செய்கிறாரோ அவர்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த பாதிப்பை காண்பிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அந்த தருணத்திற்கேற்ப கலங்கிக் கதறுபவர், கொலை செய்யும்போது அதற்கான வெறித்தனத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
சேத்தன் சீனுவின் காதலியாக வருகிற ஆஷ்னா ஜாவேரியின் முகப் பொலிவு முந்தைய படங்களில் பார்த்ததை விட இளைத்தது போலிருந்தாலும், அழகில் இளமையில் குறையில்லை. காதலன் கொலைகாரன் என தெரிகிற போது அதிர்வதும், அவன் செய்வது தவறில்லை என்பதை உணர்கிற போதும், அவன் செய்ய நினைத்ததை தானே சாமர்த்தியமாக செய்து முடிப்பதுமாக நல்ல நடிப்பைத் தந்து கதையோடு கலந்து பயணிக்கிறார்.
பெண்களுக்கெதிரான குற்றங்களை உற்சாகமாக செய்கிறவராக ஷைலேகுமார் ஆடும் காமவெறியாட்டத்தில் மிரட்டல் போதுமானதான இருக்கிறது. அவருக்கு சட்டத்தின் மூலம் உதவி செய்பவர்களாக ராம்ஸ், ராஜசிம்மன், கராத்தே ராஜா கூட்டணி கெத்து காட்டுகிறது.
கொலையாளியைப் பிடிக்க, அடுத்த கொலை நடந்து விடாமல் தடுக்க காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிரேம் காட்டும் பரபரப்பில் எனர்ஜி அதிகம். சிங்கம் ஜெயவேல் உள்ளிட்ட மற்றவர்கள் ஏற்ற கேரக்டரில் பொருந்தி நியாயம் செய்திருக்க, பின்னணி இசையில் கதையோட்டத்தின் சுறுசுறுப்பை அதிகரித்திருக்கிறார் அஸ்வத். அந்தோணி தாசன் பாடும் டப்பாங்குத்து ஆட்டம் ஒண்ணா சேர்ந்து போட்டோம் குத்தாட்டப் பாடல் உற்சாகம் தருகிறது. சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு காட்சிகள் தரமாகியிருக்கிறது.
கதையும் திரைக்கதையும் பழக்கப்பட்டதாக இருக்க, திருக்குறள் ஒன்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் அடிப்படையில் கொலைகள் நடப்பதாக காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியிருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி, போகிற போக்கில் ஆதரவற்ற முதியோர்களின் மன வலியை எடுத்துக்காட்டி அவர்கள் மீது அன்பு காட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
Rating 3 / 5

