கிரைம் திரில்லராக துவங்கி ஹாரர் திரில்லராக வேகமெடுக்கும் ‘நறுவீ.’
அந்த மலை கிராமத்தில் ஆண்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதை கண்டறியவும், 14 வருடங்கள் முன் காணாமல் போன ஆசிரியர் ஒருவருக்கு என்னவானது என்பதை தெரிந்து கொள்ளவும் இரண்டு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் இணைந்து குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்பதும் தெரிந்து கொள்வதும் நம்மைப் பிடித்து அதிர்ச்சியலைக்குள் தள்ளுவதாக இருக்கின்றன… இயக்கம் சுபாரக் எம்
கதையின் நாயகனாக, மலை வாழ் மக்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேறுவதற்காக தன்னுடைய ஆசிரியர் பணியால் இயன்றதை செய்யத் துடிப்பவராக நேர்த்தியாக நடித்துள்ளார் டாக்டர் ஹரிஷ் அலாக். நிஜத்தில் மருத்துவரான அவர் நடித்திருக்கும் முதல் படம் இது.
உண்மை கண்டறியும் இளைஞர் இளைஞிகள் குழுவிலிருக்கிற பாடினிகுமார் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டத்தை உணர்ந்து பதட்டப்படும்போது கவனிக்க வைக்கிறார்.
அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன என்பதை அலசி ஆராய்கிற வின்சு ரேச்சல் அழகாலும் கிளைமாக்ஸில் செய்யும் அதிரடி சம்பவத்தாலும் கதையில் முக்கியத்துவம் பெறுகிறார்.
பாடினிகுமாரின் காதலராக வருகிற வி ஜே பப்பு, தன் தாய் மாமாவை காணவில்லை என்ற சோகத்தில் மூழ்கியிருந்து அடிக்கடி வினோதமாக நடந்துகொள்கிற கேத்ரின் வருணா, தன் டீ எஸ்டேட்டில் வேலை கேட்டு வருகிற பெண்களை தன் காமப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிற மதன் எஸ் ராஜா என மற்றவர்கள் அவரவர் பங்களிப்பை குறையின்றி செய்திருக்க,
‘மாதவி’ என்ற பிரதான கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் சிறுமியின் வெள்ளந்தி முகமும் படிப்பில் காட்டும் ஆர்வமும் மனதில் நிறைகிறது.
அஸ்வத்தின் பின்னணி இசை ஹாரர் திரில்லர் கதைக்களத்துக்கு பொருந்தியிருக்கிறது. படம் நெடுக அவ்வப்போது எட்டிப் பார்க்கிற ஐந்தாறு பாடல்களில் ‘ஜினுக்கி ஜிக்கா’, ‘மாயக்காரா’ பாடல்கள் இதம் தருகின்றன.
கதை நிகழும் குன்னூருக்கு மேலுள்ள பரந்து விரிந்த பனி படர்ந்துகிடக்கும் மலைப் பகுதியின் பிரமாண்டத்தையும் அழகையும் ஆனந்த் ராஜேந்திரனின் கேமரா கோணங்களில் பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
படத்தின் நோக்கம் மலை வாழ் மக்களுக்கு கல்வி கிடைப்பதில் இருக்கிற சிக்கல்களை சமூக அக்கறையோடு எடுத்துக் காட்டுவதும், அந்த மக்கள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துவதுமாக இருப்பதை பாராட்டலாம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக உருவாக்க முயற்சி செய்திருந்தால் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வருகையை அதிகரித்திருக்கலாம்.

