என்ன நடந்தது என்பதை சரியாகப் புரிந்து கொள்வதற்குள்ளேயே அடுத்து என்ன நடக்கும் என அடுத்தடுத்த காட்சிகள் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்.
பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை, அண்ணி என உறவுகள் சூழ்ந்திருக்கும் கூட்டுக் குடும்பம். அதில் ஒவ்வொருவராக உயிரிழக்கிறார்கள். அந்த இழப்புகளுக்கு பின் திட்டமிட்ட சதி இருக்கிறது என தெரிகிறது. அந்த சதித்திட்டத்தை செயல்படுத்தியது யார், காரணம் என்ன என்பதையெல்லாம் கண்டறியவும் அந்த குடும்பத்தில் மிச்சருக்கும் இளம்பெண் நிஷாவை (ஜோதிஷா) காப்பாற்றவும் போலீஸ் களமிறங்குகிறது…
பாட்டியை இழப்பை கலங்குவது, அண்ணனை பறிகொடுத்து அதிர்வது, அண்ணியின் மரணம் கண்டு மிரள்வது, திகில் சம்பவங்கள் அரங்கேறும்போது பதறுவது என முகபாவங்களில் வித்தியாசம் காட்டியிருக்கும் ஜோதிஷா, ரொமான்ஸிலும் அசத்துகிறார்; பாடலில் கவர்ச்சியும் காட்டுகிறார்.
கதாநாயகன் ஷா கதாநாயகியைக் காதலிக்கும் காட்சிகளில் சுறுசுறுப்பாகவும் மனதில் தேங்கியிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும்போது பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார். பெரிதாய் தாக்கம் தராத பங்களிப்பென்றாலும் கதாபாத்திரத்தின் தேவைக்கு போதுமானதாகவே இருக்கிறது.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற நஷீர் பாஷா கம்பீரம் குறையாமல் நிதானம் தவறாமல் நடந்து தன்னைக் கவனிக்க வைக்கிறார்.
சித்தா பட வில்லன் தர்ஷனிலிருந்து மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறவர்களின் நடிப்பு கதையோட்டத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிறது. டிக்டாக் இலக்கியா வேறொரு நபர் போன்ற தோற்றத்தில் வந்து போகிறார்.
ஜி ஜெயபாலன் பட்ஜெட்டில் அடங்குகிற நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்க, பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்க்க முயற்சித்திருக்கும் மா சிவசங்கர், பாடல்களில் உற்சாகத்தை நிரப்பியிருக்கிறார்.
படத்தின் கதைக்களம் பார்த்துப் பழகிய ரிவென்ஜ் அட்டம்ட்தான் என்றாலும், இயக்குநர் எஸ் ஜவஹர்லாலின் திரைக்கதையிலிருக்கும் சிலபல திருப்பங்கள் ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

