அந்த ஊரில் வெகு காலமாக உயர் சாதிக்காரர் ஒருவரே ஊர்த் தலைவர் தேர்தலில் ஜெயித்துக் கொண்டிருக்க, அதற்கு அவர் சாதியிலிருந்தே ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கெதிராக களமிறங்கும் முடிவுக்கு வருகிறார். அந்த சந்தர்ப்பத்தில் தொகுதி தனித் தொகுதியாகிறது.
தனித் தொகுதியில் பட்டியலினத்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் உயர்சாதிக்காரர், பட்டியலினத்திலிருந்து ஒரு அடிமையைத் தேர்ந்தெடுத்து வேட்பாளராக்குகிறார். அவரை ஜெயிக்க வைத்து, தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு அதிகாரத்தை தான் கையிலெடுத்துக் கொள்ள தீர்மானிக்கிறார். (சசிகுமார் நடித்த நந்தன் படத்தில் வருகிற அதே நடைமுறை.)
அந்த அநியாயத்தை எதிர்த்து வேட்பாளராக களமிறங்குகிறார் இளம்பெண் அமுதா.
ஆதிக்க சாதிக்காரர்கள், பலமிக்கவர்கள் அவளை சும்மா விடுவார்களா? அவளை போட்டியிட விடாமல் தடுப்பதிலிருந்து எப்படியெல்லாம் அவளை வீழ்த்தலாம் என யோசித்து செயல்படுகிறார்கள். அதையெல்லாம் அவளால் சமாளிக்க முடிந்ததா? தேர்தலில் ஜெயிக்க முடிந்ததா? என்பதற்கான பதில்களே கதையின் மீதி…
அமுதாவாக வருகிற மதுமிதா, மிரட்டலில் துவங்கி தன் மீது கொலை முயற்சி நடந்தபின்னரும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் துணிச்சலைக் குறைத்துக் கொள்ளாதவராக கெத்து காட்டியிருக்கிறார். இயக்குநர்கள் அழுத்தமான கேரக்டர்களை கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை தருகிறது அவரது நடிப்பு.
சாதி வெறியர்களாக வருகிற ஊரின் பெரும்புள்ளிகளும் அவர்களின் அல்லக்கைகளும் தேவைக்கேற்ப மிரட்டலான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
பட்டியலின வேட்பாளராக களம் காண்கிற முருகேசன் அமுதா மீது காட்டும் பாசம் நெகிழவும், எடுக்கும் முடிவு அதிரவும் வைக்கிறது.
சீரியஸான கதைக்கிடையே இயக்குநர் வேல் முருகனின் காமெடி ஆறுதல்.
மற்ற கதாபாத்திரங்களில் நடிகர் நடிகைகள் கதை நடக்கும் ஊரின் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறார்கள். அனைவரிடமிருந்தும் உணர்வுபூர்வ நடிப்பு படத்திற்கு கிடைத்திருக்கிறது.
கதைக்குப் பொருந்திப்போகிற பாடல்கள் வி எச் ஹரிகிருஷ்ணன் தந்திருக்கும் இசையில் மெருகேறியிருக்க, பிரவீன் ஒளிப்பதிவு கதையோட்டத்தை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது.
இயக்குநர் வெண்பா கதிரேசன் சாதி வெறியர்கள் தேர்தல் அரசியலில் எந்தளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை, கீழ்சாதிக்காரர்களிடம் அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை தோலுரித்துக் காட்டி படத்தை உண்மையை உரக்கச் சொல்லும் தரமான படைப்பாக்கியிருக்கிறார்!
நாளை நமதே _ உருவாக்கம் எளிமை; கருத்து வலிமை!
Rating 3.5 / 5

