குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்கிற முடிவுக்கு வருவதில் இருவேறான மனநிலையில் இருக்கிற கணவன் மனைவிக்குள் நிகழும் சிக்கல்கள் தீர்வுகள் என சுற்றிச் சுழலும் கதை.
ராபர்ட், வனிதா காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள். வனிதா கல்யாணமாகி 10 வருடங்கள் கடந்தபின்னும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வரவில்லை. அதன் பின் அதாவது தனக்கு 40 வயதான நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் விரும்புகிறபோது கணவர் ராபர்ட் மறுக்கிறார். கணவனை சம்மதிக்க வைத்து குழந்தைக்கு தாயாக விரும்புகிறார் வனிதா. அதற்காக சில முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதன் விளைவுகள் என்னென்ன என்பதில் சுவாரஸ்யங்களும் இருக்கிறது; கிளைமாக்ஸில் திருப்பமும் இருக்கிறது.
குழந்தை வேண்டாம் என்றிருக்கும்போது ஒரு வித மனநிலை, குழந்தை வேண்டும் என்கிறபோது வேறொரு மனநிலை, கணவனை தன் வழிக்கு கொண்டு வர எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஏடாகூடமான எக்குத்தப்பான செயல்பாடுகள் என வனிதாவின் அலட்டலான நடிப்பு படம் முழுக்க நிரம்பியிருக்கிறது.
ராபர்ட் அன்பான கணவனாக தன் பங்களிப்பை சரியாகத் தந்திருக்கிறார்.
ஷகிலா வருகிற காட்சிகளில் காமெடி கொஞ்சமாகவும் இருக்கிறது; காமம் அதிகமாகவும் இருக்கிறது.
பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி பல வருடங்கள் முன் இளமையாக இருந்த நடிகைகள் இந்த படத்தில் தூக்கலான மேக்கப்போடு வலம் வருகிறார்கள்.
அனுமோகன், கணேஷ்கர், ஆர்த்தி, பவர் ஸ்டார் சீனிவாசன் என காமெடி நடிகர், நடிகைகள் ஏகப்பட்ட பேர் இருந்தும் சிரிப்பதற்கான காட்சிகள் இல்லை.
வெளிநாட்டுக் காட்சிகளில் ஒளிப்பதிவு அசத்துகிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை நிறைவு. சிவராத்திரி பாடலின் ரீ மிக்ஸும் பாடலின் கிரணின் ஆட்டமும் பரவசமூட்டுகிறது.
தான் இயக்கும் முதல் படத்துக்காக வயது முதிர்ந்த ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதும், அதனால் அவள் சந்திக்கும் பிரச்சனைகளுமாக உணர்வுபூர்வமான ஒரு கதையை தேர்ந்தெடுத்த வனிதா விஜயகுமார், திரைக்கதையில் காமெடி என்கிற பெயரில் கேலிக்கூத்துக்களை நிரப்பி, ஆபாசமான காட்சிகளை இணைத்துப் பிணைத்து தரத்தில் குறைந்த படைப்பைத் தந்திருக்கிறார்.
Rating 2 / 5

