கடவுள் ராமரையும், அவரது வில்லையும் மையமாக கொண்டு அட்டகாசமான ஃபேண்டஸி திரில்லர் அனுபவம் தருகிற படம்.
உலகின் பல நாடுகளில் பாதுகாக்கப்படுகிற ஒன்பது புத்தகங்களை கைப்பற்றி மந்திர சக்திகள் மூலம் ஒட்டுமொத்த உலகின் அதிபதியாக, சர்வாதிகார ஆளுமையாக மாற நினைக்கும் அரக்கன் போன்ற ஒருவனுக்கும், அவனை வீழ்ந்த களமிறங்கும் வேதா என்ற பெயர் கொண்ட இளைஞனுக்கும் இடையிலான யுத்தமும், அதனால் விளையும் பலனுமாக விரிகிறது மிராயின் கதைக்களம்.
அந்த ஒன்பது புத்தகங்களின் சிறப்பு என்ன, அவை பல நாடுகளுக்கு சென்று சேர்ந்தது எப்படி, அரக்க குணம் கொண்டவனை வேதா எப்படி வீழ்த்துகிறான் என்பதை உச்சகட்ட பரபரப்போடு காண்பித்து புது அனுபவம் தருகிறார் இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி
வேதாவாக தேஜா சஜ்ஜா. மிராய் என்ற அதீத சக்தி வாய்ந்த மந்திரக் கோலை பனிபடர்ந்த பிரமாண்டமான மலைப்பிரதேசத்தின் ரகசிய இடத்திலிருந்து எடுத்து வருகிற காட்சி சிலிர்ப்பூட்டுகிறது. அந்த கோலின் விசேச சக்தியறிந்து அதை பயன்படுத்தி கெட்டவனை அழிப்பதற்கு முயற்சிக்கும்போது ஆக்சனில் தெறிக்க விடுகிறார். அந்தப்பக்கம் ஆவேசம் கொண்டவராக நடந்துகொள்பவர் தன் மீது காதலாகி நிற்கும் பெண்ணிடம் தென்றலின் இதமாக மாறி நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார்.
உலகை தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகங்களைத் தேடி நாடு நாடாக பயணிப்பதும், தன்னை எதிரியாக நினைத்து மோதுகிறவர்களை கொடூரமாக கொன்றழிப்பதுமாக மிரட்டியிருக்கிறார் மஞ்சு மோகன்.
தமிழ் சினிமாவில் ஹீரோவை காதலிக்கும் வழக்கமான காதலியாக போலில்லாமல் உணர்வுகளை பரிமாறும்படியான கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் கதைநாயகி ரித்திகா நாயக். அவரது தெய்வீகம் மிளிர்வது போன்ற தேஜஸான அழகு கவர்கிறது. காட்சிகளின் தன்மைக்கேற அவரது கண்கள் நடிப்பது கூடுதலாய் கவனம் ஈர்க்கிறது.
நாயகனின் தாயாக ஸ்ரேயா சரண், முனிவராக ஜெயராம் மற்ற முக்கிய வேடங்களில் ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அத்தனைப் பேரும் கதையோடு கதையாய் நேர்த்தியான நடிப்பால் கலந்திருக்கிறார்கள்.
ராமாயணக் கதையின் ரெபரன்ஸ், வாய் பிளந்து பார்க்க வைக்கும் கதை நிகழ்விடங்கள், ஆச்சரியத்தின் உச்சத்துக்கு அழைத்துப் போகும் கிராபிக்ஸ் காட்சிகள், சாகஸங்கள்… என படம் முழுக்க பிரமாண்ட விருந்து படைக்க, அதன் சுவையைக் கூட்டுவதுபோன்ற பங்களிப்பை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கலந்து கட்டி வழங்கியிருக்கின்றன.
மிராய் _ மிரள வைக்கும் ஃபேண்டஸி உலகம்!

