காதலும் கண்ணீருமாய் ஒரு கதை.
ஆடு திருடி பிழைப்பு நடத்துகிற இளைஞன் ஓருவன். அவனை ஒரு கட்டத்தில் ஒரு பெண் காதலிக்க, திருட்டுத் தொழிலைக் கைவிடுகிறான். காதலியை கல்யாணம் செய்துகொண்டு வாழ்நாளை நல்லபடியாக கழிக்கலாம் என முடிவெடுக்கிறான்.
அவனைப் பார்த்து ‘யாரைக் கேட்டு திருந்தினாய்?’ என கேட்கும் போலீஸ், ஊரில் நடந்த இரணடு கொலைகளை அவன் செய்ததாக குற்றம் சுமத்த தீர்மானித்து, அதற்கான வேலைகளை தீவிரமாக்குகிறது. அவனது காதலியையும் தூக்கிப் போகிறது.
இப்படி பரபரக்கும் கதையில், காதலர்களின் நிலைமை என்னவாகிறது என்பதே மீதமிருக்கும் கதை…
கதைநாயகன் மைனா’ சேது. திருடன் என்றாலும் நல்லவன். கால் உடைந்து கிடந்த தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணைக் காதலிக்கும்போது மென்மையான மனிதனாகவும், அவளுக்கு ஆபத்து என்று தெரியும்போது ஆக்ரோசத்தின் உச்சத்துக்கும் போகிறார்.
நாயகி சம்ரிதி தாராவுக்கு லட்சணமாக முகம். காதல் உணர்வை பிரதிபலிப்பதாகட்டும் காதலனுக்கு போலீஸாரால் பிரச்சனை என்கிற போது பதறி துடிப்பதாகட்டும் காட்சிகளுக்கேற்ற கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
தன்னுடைய அடியாட்களை வைத்து கொலை அதுஇதுவென செய்வது, போலீஸாரை அடியாட்களாக வைத்துக் கொண்டு செய்த குற்றங்களிலிருந்து தப்பிப்பது, கதாநாயகியை கதறவிட்டு அனுபவிக்க விரும்புவது என்ற வில்லத்தனங்களை மிதமான மிரட்டலோடு செய்திருக்கிறார் பி எல் தேனப்பன்.
சி எம் பாலா கேடுகெட்ட போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டியிருக்க, கதாநாயகியின் பாட்டியாக வருபவர் மந்திர தந்திரம் தெரிந்தவராக நடமாடியிருக்கிறார்.
அமர்கீத் இசையில் ‘என்னடி செஞ்ச’, ‘கத்துறேன் நான் கரையுறேன் நான்’ பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசை ஏற்ற இறக்கங்களோடு பயணித்திருக்கிறது.
காடு மேடு என பரவிப் பாய்ந்து காட்சிகளை தரமாக கொண்டு வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பனின் கேமரா.
படத்தின் முன் பாதி காதலும் காதல் சார்ந்தும் இதமாக கடந்தோடி, அதன்பின் சாதாரண திருடனை போலீஸ் கொலைக் குற்றவாளியாக்குகிற கொடூரம், அதனால் அவன் வாழ்க்கை சிதைகிற வேதனை என வலிகளின் பிரதிபலிப்பாக மறுபாதியை நகர்த்தி ரசிகர்களை இருவேறு உணர்வுகளுக்குள் தள்ளியிருக்கிறார் இயக்குநர் ஏ பி ஜி ஏழுமலை.
மையல் _ காதல் பாதி; கண்ணீர் மீதி!
Rating 3 / 5

