சமூக அக்கறை மிகுந்த கதைகளை கமர்சியல் மசாலா திரைக்கதையில் போட்டுப் புரட்டி பரபரப்பு கூட்டுகிற ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை மாஸ் ஆக்சன் ஹீரோவாக்கியிருக்கிற ‘மதராஸி.’
தமிழக மக்கள் கைகளில் துப்பாக்கி புழக்கத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கும் பலம் வாய்ந்த நபரையும் அவனது கும்பலையும் தீர்த்துக் கட்டும் முயற்சியில் இறங்குகிறது இந்திய அரசின் என் ஐ ஏ அமைப்பு. உயிரை இழக்கத் தயாராக இருக்கும் நபரால்தான் அவனை அழிக்க முடியும் என்ற நிலையில், தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ரகுவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் ‘கொல்ல’ திட்டமிடுகிறது என் ஐ ஏ.
அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தி நினைத்ததை நடத்தி முடிக்கிறார்கள் என்பது கதையின் மீதி. ரகுவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? ரகுவின் மனநல பாதிப்பு எப்படிப்பட்டது, அந்த பாதிப்புக்கு அவன் ஆளானதற்கு காரணம் என்ன என்ற சிலபல கேள்விகளுக்கான பதில்களும் அந்த மீதிக் கதையில் கலந்திருக்கின்றன…
தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஆரம்பக் காட்சியில் கலகலப்பூட்டும் சிவகார்த்திகேயன், ஐ என் ஏ அமைப்பு திட்டமிடும் ஆபரேஷனுக்கு தயாரானபின் நடக்கும் சம்பவங்களில் சுனாமி சுழன்றடிப்பதைப் போன்ற ஆக்சன் அதிரடியால் அப்ளாஸ் பெறுகிறார். காதல், சென்டிமென்ட் என மற்ற உணர்வுகளை அளவாக நிறைவாக தந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனை காதலிப்பதாகட்டும், ஒரு கட்டத்தில் சமூக அக்கறையோடு அந்த காதலை தவிர்ப்பதாகட்டும், வில்லன் கும்பலிடம் மாட்டிக் கொண்டு அடிபட்டு மிதிபடுவதாகட்டும் ருக்மிணி வசந்தின் நடிப்பு கவனம் பெறுகிறது.
துப்பாக்கி புழக்கத்தை உருவாக்க திட்டமிடும் நபராக வித்யூத் ஜமால் காட்டியிருக்கும் வில்லத்தனம் மிரட்டல். அவரது நண்பராக வருகிற ஷபீர் கல்லரக்கல்லும் தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
என் ஐ ஏ உயரதிகாரியாக வருகிற பிஜூ மேனன் பணியில் எமோஷனுக்கு ஆளாக மாட்டோம் என்ற உறுதியைக் கடைப்பிடித்து வில்லன் கும்பலை ஒழிக்க திட்டமிடுவது, அந்த திட்டமிடலில் மகனை இழந்தபின் மனம் உடைவது, உடனடியாக அந்த துக்கத்திலிருந்து மீண்டு பணியில் சுறுசுறுப்பாவது என பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார்.
விக்ராந்த், விமலா ராமன், ரிஷி ரித்விக் என மற்றவர்கள் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் வலம் வருகிறார்கள்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆக்சன் மோடிலேயே வட்டமடித்துக் கொண்டிருக்க ஸ்டன்ட் கோரியோகிராபர்கள் கெவின் குமாரும் திலிப் சுப்புராயனும் தெறிக்க விட்டிருக்கிறார்கள். அப்படியான அனல் பறக்கும் காட்சிகளுக்கு அசுர பலம் தந்திருக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. பாடல்களில் ‘சலம்பல’ உற்சாகமூட்ட, ‘தங்கப்பூவே’ ரசிக்கும் ரகத்தில் சேர்கிறது.
கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளும் பிரமாண்டமாக இருக்க சுதீப் எலமனின் ஒளிப்பதிவில் அந்த பிரமாண்டம் பல மடங்காகியிருக்கிறது.
எடிட்டர், கலை இயக்குநர் என மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பெரியளவில் படத்தை தாங்கியிருக்கிறது.
ஹீரோவுக்கு இருக்கிற மனநலப் பிரச்சனை படு வித்தியாசமாக இருக்க, அதிலிருந்து பயணிக்கும் கதையின் ஒவ்வொரு நகர்வும் ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வந்து, திருப்தியான படம் பார்த்த உணர்வைத் தருவதால் சூப்பர் ஹிட் பட்டியலில் இணைகிறது இந்த ‘மதராஸி.’
Rating 4.5 / 5

