விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மூன்றாம் கண்.’ ஜூன் 12-ம் தேதி இந்த படம் திரைக்குவரவுள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.
அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.
ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
நடிகர் விதார்த் பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.
இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”
நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான். அதனால் நீங்கள் அனைவரும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.
இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.
ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.
‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம். ஜூன் 12-ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

