கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள படம் ‘மெய்யழகன்.’ இந்த படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசியபோது, “96 எல்லோருக்கும் பிடித்த படம். கதை, உரையாடல் என ஒவ்வொரு விஷயத்தையும் பிரேம்குமார் பார்த்து பார்த்து இழைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நாள் ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் தான், பிரேம்குமார் இப்படி மெய்யழகன் படத்திற்காக பிரேம் ஒரு கதை வைத்திருக்கிறார் என என்னிடம் கூறினார். உடனே அவரை நானே நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். 96 படம் வெளியான பிறகு இந்த கதைக்காகவே ஆறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் பிரேம் குமார். எப்படி அவரை தயாரிப்பாளர்கள், மற்ற ஹீரோக்கள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. இதிலிருந்தே அவர் புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி பொருட்காட்சியில் இருக்கும் ஒரு அரிய பொருளை போன்றவர் அவர்.
இந்த ஸ்க்ரிப்ட்டை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் கொட்டியது. அனேகமாக கோவிட் சமயத்தில் இந்த கதையை பிரேம் எழுதியிருப்பார் போல. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் என சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்கு செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். எல்லோரும் இந்த படத்தில் எப்படி நடித்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு கமர்சியலான படம், இதில் ஏன் நான் நடிக்க கூடாது ? கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார் அதற்கடுத்து இப்போது இந்த மெய்யழகன் படத்தில் தான் பல நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில்ல் கலந்து கொண்டேன். ஆனால் இதில் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை.
நானும் அரவிந்த்சாமி சார் பேசும்போது கூட இந்த காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை அப்படியே குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். படம் முழுவதும் அத்தான் அத்தான் என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் ஒரு கதாபாத்திரம் எனக்கு. திண்டுக்கலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே உள்ள பேமஸான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை 8 மணிக்கே பிரியாணி வாங்கி கொடுத்து அசத்தினார்.
96 படத்தின் காதலே காதலே பாடல் இப்போதும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. அதுபோல மெய்யழகன் பாடலையும் ஊருக்குப் போகும்போது கேட்டுக்கொண்டே போவார்கள். இந்த பாடலுக்கு கமல் சாரே ஏற்படுத்திய வேல்யூவுக்கு நன்றி. ராஜா சார் காதல் இல்லாமல் பிரேம்குமார் கதையை எழுதவே மாட்டார்.. இதிலும் அது நடந்திருக்கு” என்றார்.
இயக்குநர் பிரேம்குமார் பேசியபோது “96 படத்திற்கு பிறகு 6 வருடம் கழித்து இப்போதுதான் மீடியா முன் நிற்கிறேன். கடந்த நவம்பர் மாதம் படத்தை தொடங்கி இந்த செப்டம்பரில் அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம். 96 படத்தில் நடித்த நட்சத்திரங்கள் யாரும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவதர்ஷினியை தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அதேபோல முதலில் இந்த படத்தில் இருக்கும் ஒரு தங்கை கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதிவ்யாவை அணுகினோம். அந்த சமயத்தில் அவரிடம் தேதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து இப்போது அவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக அணுகியபோது உடனே ஓகே சொன்னார்.
இந்த நேரத்தில் ஏன் இந்த படம் என்றால் சமீப காலமாக சோசியல் மீடியாக்களிலும் வெளியிடங்களிலும் வெறுப்பு சிந்தனை பரவி வருவதை பார்க்க முடிகிறது. அன்பு தான் இதை மாற்றும். இந்த படம் அன்பை பற்றி பேசுகிறது. படத்தின் டைட்டிலில் இருந்து எல்லா விஷயங்களிலும் தமிழை முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு காரணம் தமிழ் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டே இருக்கிறது. மெய்யழகன் படம் அதை மாற்ற முயற்சி செய்யும்” என்றார்.
நடிகர் அரவிந்த்சாமி பேசியபோது “இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன்” என்றார்.

