அந்த பெண்மணி ஜெகதம்மாவைப் பார்த்தால் 40 வயதைக் கடந்தவர் போல் தெரிகிறது. திருமணம் செய்து கொள்ளாத அவர், தான் வசிக்கும் ஊரில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அந்த தேர்தலில் பெரிய பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை செய்வேன், இதை செய்வேன் என்றெல்லாம் சொல்லி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதையெல்லாம் பார்க்கும்போது, அரசியலில் பெரிய அனுபவம் கொண்ட அவர்களை மீறி இந்தம்மா என்ன செய்துவிடப் போகிறார், எப்படி ஜெயிப்பார் என்றெல்லாம் நமக்குள் யோசனை உருவாகிறது.
அந்த மக்கள் மத்தியிலான பிரச்சாரத்தில் ஜெகதம்மா, தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு தெரியாத ஊர் மக்களின் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி, தான் பொறுப்புக்கு வந்தால் அந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பேன் என்பது போல் அவர் சொல்லச் சொல்ல சுற்றிலும் கூடியிருக்கும் பெண்கள் ஆரவாரம் செய்கிறார்கள். அதிலிருந்து அவர் பெண்களின் ஆதரவு பெற்றவர் என்பதும், அவரது வெற்றியும் உறுதியாகிவிடுகிறது.
அதேபோல் தேர்தலில் ஜெயிக்கவும் செய்கிறார்; பதவியில் அமர்ந்ததும், மக்களுக்கு எதிராக நடக்கும் ஒரு விபரீத செயலை தடுப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அந்த செயலில் ஈடுபடுபவருக்கு எதிரியாகிறார். அதன் விளைவாக சிறைக்குச் செல்வது உட்பட பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்.
அதையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் மக்கள் ஆதரவுடன் கிடைத்த பதவியை வைத்து நினைத்ததை எப்படி செய்து முடிக்கிறார் என்பதும் ஊர்வசியின் கணவர் சிவபிரசாத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் மீதிக் கதை…
ஜெகதம்மாவாக ஊர்வசி. ஆரம்பக் காட்சிகளில் வட்டிக்கு பணம் கொடுப்பவராக, அவர் தலைமையில் இயங்கும் இரண்டு குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்டு மக்கள் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பவராக வலம்வரும்போது மேடம் செய்கிற வேலை எதுவானாலும் அதில் கறாராக இருப்பவர் என்பது தெரிகிறது. அந்த காட்சிகளில் அவரது செயல்பாடுகள் சீரியஸானவை என்றாலும் அவருக்கே உண்டான காமெடி நிரம்பி வழியும் உடல்மொழி ரசிக்க வைக்கிறது.
தேர்தலில் போட்டி, மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகளால் நிம்மதியிழப்பது என நீளும் காட்சிகளில் தனது நடிப்பு பங்களிப்பை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்துவதும், கிளைமாக்ஸில் அந்த கொடி இந்த கொடி என எதுவும் வேண்டாம் என சொல்லி தேசியக்கொடியை காட்டுவதும் கேரக்டரின் மதிப்பை உயர்த்துகிறது.
ஜெகதம்ம்மாவின் உதவியாளராக வருகிற காலேஷ் ராமானந்த் எந்த தருணத்தில் எப்படி செயல்படுவது என்பது புரிந்தவராக, துறுதுறுவென சுற்றி வருவது காட்சிகளுக்கு எனர்ஜி தருவது போலிருக்கிறது.
தேர்தல் களத்திலிருக்கிற நபர்கள், சமூக விரோதியாக வருகிறவர், மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்போர் நடிகர், நடிகைகளாக தெரியாதபடி எதார்த்தமான நடிப்பால் கதை நிகழும் மண்ணின் மாந்தர்களாக மாறியிருக்கிறார்கள்.
கதைக்களத்துக்கு பொருத்தமான பாடல்கள் கைலாஷ் மேனன் இசையில் உற்சாகமூட்டுகின்றன. பின்னணி இசை அளவாக அமைந்திருக்கிறது. அனில் நாயரின் ஒளிப்பதிவில் இயற்கையின் வரமான கேரளத்தின் அழகு அள்ளுகிறது.
கதையும் படமாக்கப்பட்ட விதமும் எளிமையாக இருக்க, அதன் மூலம் சொல்ல வரும் கருத்துக்களில் இருக்கும் ஆழம் படத்தின் உயிரோட்டமாகிவிடுகிறது. காமெடியும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் படத்தை அலுப்பு சலிப்பின்றி ரசிக்க முடிகிறது.
Rating 3.5 / 5

