சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் ‘லவ் 3.0.’ எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே.

இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் மில்லியன் தொடர்பாளர்களைத் தாண்டி பிரபலமாக இருப்பவர் அரனிகா .இவரை அனைவரும் செல்லமாக ரீல்ஸ் அக்கா என்று அழைப்பார்கள். ரீல்ஸ் உலகில் உச்சத்தில் இருக்கும் இவர் கதாநாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.இவர் ஜிவி பிரகாஷ் நடித்த முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தப் படம் இன்னும் வரவில்லை.
இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் கோயமுத்தூர் மாப்ள.
இவரும் இன்ஸ்டாகிராம் உலகில் சக்தி மிக்க ஒருவராக இருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக இன்னொரு பிரபலம் கார்த்திகேயன் கே என் ஸ்மைலி நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மெரீனா மாலில் வெளியிடப்பட்டது. விழாவில் பட குழுவினர்,மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பார்வையாளர்கள் நாற்புறமும் சூழ நடைபெற்ற இந்த வெளியீட்டுக் கொண்டாட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சௌந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவர் விஜய் – அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர். மேலும் விழாவில் ‘சம்பவம்’ படத்தின் இயக்குநர் ரஞ்சித் குமார், பாடலாசிரியரும் கவிஞருமான சொற்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவில் கதாநாயகி அரனிகா பேசும்போது, “இந்த படத்தில் நடிப்பதற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இது இப்போது இருக்கும் தலைமுறையின் லவ் பற்றிப் பேசுகிற படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.நான் எனக்குக் கொடுத்த சவாலான பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.திரை உலகத்திலும் எனக்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்.
கதாநாயகன் கார்த்திகேயன் கே என் ஸ்மைலி பேசும்போது, “இன்ஸ்டாகிராமில் சின்ன சின்ன விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன் இப்போது இந்த இடத்திற்கு வந்து கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும். ராஜபாளையத்திலிருந்து உங்களை நம்பி சென்னை வந்திருக்கிறேன் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’என்றார்.

