நூற்றுக்கணக்கான குடும்பங்களுடன் ஒரு அப்பார்ட்மெண்ட், அதிலிருந்து காணாமல் போகிற சிறுமி; அவளைத் தேடுவதற்காக களமிறங்கும் போலீஸார் என பரபரக்கிறது ‘காளிதாஸ் 2.’
காவல்துறை அதிகாரி காளிதாஸாக பரத். தன்னை மதிக்காத உயரதிகாரியுடன் அலைந்து திரிந்து காணாமல் போன சிறுமிக்கு என்னவானது என்பதை கண்டுபிடிக்கும் விதம் அசத்தலாக இருக்கிறது.
தான் நினைத்ததுதான் சரி என்கிற முன்முடிவோடு இயங்குகிற காவல்துறை உயரதிகாரியாக பரவாயில்லை ரக தோரணையோடு வலம் வருகிறார் பவானிஸ்ரீ.
நல்லவனாக இருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலைவெறி சுமந்து திரிகிற நபராக, கதையின் இரண்டாவது ஹீரோவாக அஜய் கார்த்தி மிரட்டவும் செய்கிறார்; மிரளவும் செய்கிறார்.
‘பூவே உனக்காக’ சங்கீதாவை பல வருடங்கள் கழித்து பார்க்க முடிகிறது. மனதுக்குள் போரட்டங்களை வைத்துக்கொண்டு இயல்பாக நடந்து கொள்கிற கேரக்டர். குறையின்றி நடித்திருக்கிறார்.
பிரகாஷ் ராஜ், கிஷோர் என நடிப்பில் தேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்கள். மிகச்சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைக்கிறது அவர்களின் அனுபவ நடிப்பு.
காணாமல் போன சிறுமியின் பெற்றோராக ஆனந்த் நாக் – அபர்ணதி யின் நடிப்பு கலங்க வைக்கிறது.
சிங்கம் ஜெயவேல், டி எம் கார்த்திக் உள்ளிட்ட மற்றவர்கள் கதைக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்க, பயமும் பதட்டமும் சூழ்ந்தபடி வேகமெடுக்கும் கதைக்கேற்ற அதிரடியான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சாம் சி எஸ். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவில் இருள் நிரம்பிய காட்சிகள் கூட வெளிச்சமாக தெரிகிறது.
காணாமல் போகும் ஒரு குழந்தை, கற்பழிப்புச் சம்பவம், அரிவாள் வெட்டு, தெறிக்கும் ரத்தம் என கிரைம் சப்ஜெக்டுக்கான அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து கட்டிய கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத திரைக்கதை அமைத்து, படு இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். அந்த பயங்கரமான கிளைமாக்ஸ் அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைக்கிறது.
Rating 3 / 5 

