ஈஸ்வர பூந்தோட்டம் என்பது பரந்து விரிந்த காட்டுப் பகுதி. அதில் ஏராளமான வளங்களும் தெய்வ சக்தியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அவற்றை அபகரிக்க ஒரு மன்னரும், காட்டுக்குள் வாழ்கிற ஒரு இனக்குழுவும் ஸ்கெட்ச் போட, அவர்களை காட்டின் பாதுகாவலனான பெர்மே (ரிஷப் ஷெட்டி) அழித்து ஒழிப்பதே ‘காந்தாரா’ படத்தின் முந்தைய பாகமாக உருவாகியுள்ள இந்த ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் கதை.
அப்படியொரு கம்பீரமான உடற்கட்டு, அப்படியொரு வீரம், அப்படியொரு பலம், அப்படியொரு திமிர், அப்படியொரு போராட்டக் குணம், அப்படியொரு முகபாவம் கதையின் நாயகன் பெர்மேவாக ரிஷப் ஷெட்டி எதிரிகளை அழிக்கிற அவதாரமாக ஆடியிருக்கும் ஆட்டம் உக்கிரமான ருத்ரதாண்டவம். எழுந்து நின்று பாராட்ட வேண்டிய நடிப்பு!
இளவரசியாக வருகிற ருக்மிணி வசந்த்துக்கு கவர்ச்சியாக நடமாடுகிற, கதைநாயகனை காதலிக்கிற வேலை மட்டும்தான் என்று நினைத்தால் உம்ஹூம், கிளைமாக்ஸ் நெருங்கும்போது அவரது அதிரடி அட்டாக்கும், நடிப்பில் இந்தளவுக்கு அசத்துவார் என்பதும் எதிர்பாராதது.
இளவரசராக இருந்து மன்னராக முடிசூட்டிக்கொள்ளும்போதே ஆணவத்தைக் காண்பிக்கிற குல்ஷன் தேவய்யா ஈஸ்வர பூந்தோட்டத்தை அபகரிக்கும் முயற்சிகளில் கொடுங்கோல் மன்னர்களை நினைவூட்டும்படி நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
ஜெயராம், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி என முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களில், கூட்டம் கூட்டமாக வருகிறவர்களில் ஒருவரின் நடிப்பையும் குறை சொல்லிவிட முடியாது.
கதாநாயகன் சாமியாடி எதிரிகளை துவம்சம் செய்கிற காட்சிகள், தேர் ஊர்வலம், காடு, மலை, அருவி, பிரமாண்டமான பாங்கரா சாம்ராஜ்யம், துறைமுகம், மிரளவைக்கும் சண்டைக் காட்சி… படத்தின் ஆச்சரியப்படுத்தும் அத்தனை அம்சங்களையும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்பின் கேமரா வளைத்துச் சுருட்டியிருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.
கதையோட்டமும் அதில் இணைந்து பிணைந்திருக்கும் ஆன்மிகமும் காட்சிக்கு காட்சி சிலிர்ப்பூட்டிக் கொண்டேயிருக்க, அஜ்னீஷ் பி. லோக்நாத்தின் பின்னணி இசை அந்த சிலிர்ப்பை பல மடங்காக்குகிறது.
சிஜி தொழில்நுட்பப் பங்களிப்பு படத்தின் பெரும் பகுதியை தாங்கியிருக்கிறது. படம் மேக்கிங்கில் மிரட்டுகிறது என பாராட்டுக்கள் குவிவதற்கு காரணமாக இருக்கிறது.
தன் இனத்துக்கும் தன் இனம் வாழும் பகுதிக்கும் ஆபத்து சூழ்கிறபோது அந்த மக்களின் பாதுகாவலன் எடுக்கும் அதிரடி முயற்சிகளும் அதற்கு கடவுள் துணை நிற்பதுமாக ஒரு ஃபேண்டஸி கதை. அதை எந்தளவுக்கு பிரமாண்டமாக எடுக்க முடியுமோ அந்தளவுக்கு பிரமாண்டமாக எடுத்து, இந்திய சினிமாவுலகமே தன்னை திரும்பிப் பார்க்கும்படி செய்திருக்கிற இயக்குநர் ரிஷப் ஷெட்டி அடுத்த பாகத்திற்காக தந்திருக்கும் முன்னோட்டம் மூலம், அதில் அவர் ஆடப்போகும் ஆட்டம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்போதிருந்தே தூண்டுகிறார்.


