ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலித்தால் அது பழகிய கதை, அந்த இரண்டு பேரையும் அந்த பெண் காதலிப்பது இந்த ‘கடுக்கா’வின் கதை.
அப்படி அவள் இரண்டு பேரையும் காதலிப்பது ஏன்? இரண்டு பேரை காதலித்தாலும் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படியெனில் அந்த ஒருவர் யார்? அவள் கடுக்கா கொடுத்தது யாருக்கு?
இப்படியான கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையில் பதில்களைத் தந்திருக்கிறார் எஸ் எஸ் முருகராசு
தன்னைக் காதலிக்கும் இரண்டு பேருக்கும் லவ் லெட்டர் கொடுப்பது, அப்படி கொடுத்தது இரண்டு பேருக்கும் தெரிந்தபின் கற்பனையான காரணம் சொல்லி சமாளிப்பது என தோற்றத்தில் சிறுமியாக தெரிந்தாலும் நடிப்பில் பெரிய மனுஷியாய் மாறியிருக்கிறார் ஷிமேகா.
கதையின் இரு ஹீரோக்களில் விஜய் கெளரிஷ்க்கு பெண்களை சைட் அடிப்பது ஃபுல் டைம் ஜாப். அதை ரசிக்கும்படி செய்து, காதலில் விழுந்தபின், காதலில் தோல்வியடைந்தபின் என காட்சிகளுக்கு ஏற்றபடி பொருத்தமான நடிப்பை தந்திருக்கிறார்.
உழைப்புக்கு மரியாதை கொடுப்பவராக, தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றியவளை பழி தீர்ப்பதற்கு கத்தியோடு புறப்படுபவராக கதையின் இரண்டாம் ஹீரோவாக வருகிற ஆதர்ஷ் மதிநாதனின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் தரமான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலமாகியிருக்கிறார்கள்.
தேனிசைத் தென்றல் தேவா உற்சாகமாக பாடும் ‘பொல்லாத பார்வை போதையேத்துது’ பாடலின் இசையில் மனதை மயக்குகிறார் கெவின் டி’கோஸ்டா. ‘காய்ச்ச நோவு போலத்தான்’ பாடலில் தாலாட்டின் இதமிருக்கிறது.
கதையின் பயணம் ஈரோடு, திருப்பூர் என பாய்ந்தோட அந்த பகுதிகளை நேட்டிவிட்டி மாறாமல் படமாக்கியிருக்கிறார் சதீஷ்குமார் துரைக்கண்ணு.
காதல் என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறும் ஆண்களை, பெண்களை காமவெறியோடு மட்டுமே பார்க்கிற ஆண்களை இப்படியும் தண்டிக்கலாம் என்ற கற்பனையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் கதை சீரியஸ்தான். ஆனால் திரைக்கதையை காமெடி காட்சிகளால் நிரப்பியிருப்பதால் படம் பார்க்கிறவர்கள் வயிறு குலுங்க சிரிப்பது உறுதி.

