பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கண்ணப்பர் வரலாறு நிஜ வரலாறு போல நெஞ்சிற்கு நெருக்கமாக இருக்கிறதா?
பேரழகு கொண்ட பெரும் வனப்பகுதி. அங்கு ஐந்து இனக்குழு இருக்கின்றனர். அதில் ஒரு குழுவிற்கு தலைவர் சரத்குமார். அவரின் மகனான ஹீரோ விஷ்ணு மஞ்சு கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதற்கு ஒரு காரணம் கதையிலுள்ளது. இந்த இனக்குழுவிற்கு சொந்தமான இடத்தில் ஒரு வாயுலிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்தை அபகரிக்க அரக்கர் குலம் அடி போடுகிறது. ஹீரோ தன் குழுக்களோடு இணைந்து அதை எப்படித் தடுத்தார் என்பதும், அவர் கடவுள் பக்தனாக மாறினாரா என்பதும் படத்தின் மீதிக்கதை
எதிரிகளை துவம்சம் செய்கையிலும், ஹீரோயினை கவசமாக்கி கொள்கையிலும், கடவுளை கிண்டல் செய்யும் போதும் எதார்த்தமாக நடித்துள்ளார் நாயகன் விஷ்ணு மஞ்சு. சரத்குமார் வழக்கம் போல நச்சென்ற நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகி ப்ரீத்தி முகந்தன் அழகு நடிப்பு இரண்டிலும் கிரேட். சிறப்புத் தோற்ற நாயகர்களில் பிரபாஸ் மட்டுமே ஆல் பாஸ்
படத்தில் கேமரா மேன் டீம் மட்டும் எக்ஸ்ட்ரா வொர்க் செய்துள்ளனர். எல்லா பிரேமிங்கும் அட்டகாசம். சிஜி மிகவும் சுமாராகவே இருக்கிறது. நிறைய சிஜி ஷாட்கள் பல்லிளிக்கின்றன. எடிட்டர் இன்னும் 45 நிமிடங்களை கூட வெட்டி வீசியிருக்கலாம்
இசை அமைப்பாளர் பாடல்கள் மற்றும் பேக்ரவுண்ட் ஸ்கோர் இரண்டிலும் தனிக்கவனம் எடுத்து உழைத்திருக்கிறார். பாராட்டுக்கள்!
படத்தின் நிஜ வில்லன் படத்திற்குள் வரும் வில்லன் அல்ல. திரைக்கதை தான் நிஜ வில்லன். ஒரு நல்ல ஆன்மிக படத்திற்கான கன்டென்ட் கிடைத்தும் தேவையே இல்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடித்துள்ளனர். கடைசி கால் மணிநேரம் மட்டுமே கண்ணப்பர் வரலாறு வருகிறது. கண்ணப்பர் வரலாற்றை மட்டும் வைத்தே தாறுமாறாக ஒரு சாமி படத்தைக் கொடுத்திருக்கலாம். சிலபல நல்ல தத்துவங்களை பகுத்தறிவு மற்றும் பக்தி கலந்த கொடுத்துள்ளவற்றுக்காக மட்டும் கண்ணப்பாவை காணச் செல்லலாம்

