கதையின் நாயகன் சாந்தகுமார். அவன் வேலை செய்யுமிடத்தில் மேனேஜருடன் பிரச்சனை உருவாகிறது. முதலாளிஅடித்து அவமானப்படுத்துகிறார்.
அந்த வேதனையோடு குடிக்கிற அவன், போதையேறிய நிலையில் தான் வசிக்குமிடத்தின் ஹவுஸ் ஓனரிடம் வாக்குவாதம் செய்து அவரது மண்டயை உடைக்கிறான். லாரியொன்றின் கண்ணாடியை கல்வீசி நொறுக்குகிறான். முன்னாள் காதலியின் வீட்டுக்கு நடு இரவில் போய் கலாட்டாவில் ஈடுபடுகிறான்.
எல்லோருமாக சேர்ந்து போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். குழந்தையொன்று காணாமல் போயிருக்க அதை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கும் போலீஸ் அதிகாரி அவனை அடித்து துவைக்கிறார். ஒரு கட்டத்தில் அவன் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை அணிந்துகொண்டு, ஸ்டேசனிலிருக்கிற வாக்கி டாக்கியை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறான்.
போலீஸ் தரப்பு அவனைப் பிடித்து வாக்கி டாக்கியை கைப்பற்ற வேண்டும்; குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும். அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பது மீதிக் கதை…
சாந்தகுமாராக வருகிற பிரித்விராஜ் ராமலிங்கம் தள்ளாட்ட நடை, தெனாவட்டுப் பேச்சு என நிஜ குடிகாரர்களின் ஜெராக்ஸாக மாறியிருக்கிறார். முன்னாள் காதலியின் வீட்டுக்குப் போய் அவர் செய்யும் கலாட்டாக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
கல்லூரிக் காலத்தில் தன்னைக் காதலித்தவன் தன் வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து கண்டபடி உளறிக்கொண்டிருக்க, தன் கணவன் முன் வைத்து தன்னை செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க அதை சமாளிக்கும் விதத்தில் ரசிக்க வைக்கிறார் மைனா நந்தினி.
தன் மனைவிடம் யாரோ ஒருவன் தாறுமாறாய் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து தனக்குள் டென்சன் ஏறுவதை பொருத்தமான முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார் ஆடுகளம் முருகதாஸ்.
இன்ஸ்பெக்டராக விஜய் முருகன் தேவைக்கேற்ப கெத்து காட்டியிருக்க, வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், காளி வெங்கட் என நடிப்பில் அசத்துகிறவர்கள் கெஸ்ட் ரோலில் வந்துபோகிறார்கள்.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் செவிகளுக்கு விருந்து. பின்னணி இசையில் பெரிதாய் எந்த தாக்கமும் இல்லை. மதன் குணதேவின் ஒளிப்பதிவு கதைக்களத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
ஒரு குடிபோதைக் காரன் ஒரு இரவில் செய்யும் அடாவடிகளையும் அவன் சந்திக்கும் அதிர்ச்சியான நிகழ்வையும் கதையாக்கி, விறுவிறுப்பான கிரைம் திரில்லராய் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்ஸின் நெருக்கத்தில் நரபலி அது இதுவென பதற்றத்தை அதிகரித்திருக்கிறார் இயக்குநர் என் அரவிந்தன்.
கதை, திரைக்கதையில் குறிப்பிட்டுச் சொல்ல குறைகள் இருந்தாலும் குடிக்கிற நாள் ‘Bad டே’ என்பதையும் குடியை விடுகிற நாள் ‘குட் டே’ என்பதையும் மனதில் பதிய வைப்பதால் ‘குட் டே’வுக்கு ‘வெரி குட்’ என்ற பாராட்டை பரிசளிக்கலாம்.

