ஒய் ஜி மகேந்திரன் நடித்து மேடை நாடக வடிவில் ஹிட்டான சாருகேசி, மெகா ஹிட் படங்களின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏற்றம் கண்டிருக்கிறது.
நாடறிந்த இசைமேதை, வாய்ப்பாட்டுக் கலைஞர் சாருகேசி மனைவியோடும் மனைவியின் மகனோடும் (பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார் அவரது மகன். அது போதாதென்று மகன் கட்டிக் கூட்டிவந்த பெண் கரடு முரடான கற்களை அள்ளிப் போடுகிறார். அதுவும் போதாதென்று அல்சைமரும் சேர்ந்து கொண்டு சாருகேசியை ஆட்டிப் படைக்கிறது.
மகனும் மருமகளும் பிரச்சனையாக உருவானதன் பின்னணி, பிரச்சனைகளிலிருந்து சாருகேசியால் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதே திரைக்கதை…
சாருகேசியாக ஒய் ஜி மகேந்திரன். எண்ணங்களாலும் செயல்களாலும் உன்னதமான கேரக்டர். சற்றே மிகைப்படுத்திய நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். மனைவியாக சுஹாசினி தோற்றத்தாலும் நடிப்பாலும் நல்ல பொருத்தம்.
மகனாக ராஜ் அய்யப்பா, ஆரம்பத்தில் கடுகடு முகம் காட்டி தந்தை பற்றி தெரிந்துகொண்ட பின் கருணையின் வடிவாக மாறுகிறார். அவரது நகலாக ஒரு கட்டம் வரை சாருகேசியை பழி வாங்கும் வேலையை அளவான வில்லத்தனத்தில் செய்து, பின்னர் அப்படியே மாறி கனிவு காட்டுகிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
சத்யராஜ் மனித வடிவில் கடவுளாக வந்து கவனம் பெறுகிறார். தலைவாசல் விஜய், சமுத்திரகனி, ஜெயப்பிரகாஷ் என மற்றவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்க, தேனிசைத் தேவாவின் இசையில் பாடல்கள் பரவசமூட்டுகிறது. பின்னணி இசையும் நிறைவு. பி எல் சஞ்சயின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மனிதர்களில் மகான் என்கிற லெவலில் வாழ்க்கை பாதையில் பயணிக்கிற ஒரு கலைஞனை சோதனைகள் சுனாமியாய் சூழ்வதும், அதையெல்லாம் தாண்டி அந்த கலைஞன் இசையுலத்துக்கு மகத்தான படைப்பை வழங்கி வாழ்வை நிறைவு செய்வதுமாக சிலிர்ப்பூட்டும் கதை படத்தின் பலம். சினிமாவாக தயாரான பின்னும் நாடகமாகவே இருப்பது பலவீனம்.
Rating 2.5 / 5

