இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படும் ஒருவன் படும் பாடே கார்மேனி செல்வத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே.
செல்வமாக நடித்திருக்கிற சமுத்திரகனிக்கு டிரைவர் வேலை. ஒரு மாத காலம் அந்த வேலையில் ஈடுபட முடியாதபடி ஒரு சூழ்நிலை உருவாக, அந்த நேரமாகப் பார்த்து அவசரத் தேவை ஏற்பட கடன் வாங்குகிறார். ஒரு நபர் தூண்டிவிட்ட காரணத்தால் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக கடன் மேல் கடன் வாங்குகிறார். மனம்போன போக்கில் செலவு செய்கிறார். தாறுமாறாக பயணிக்கிற வாகனம் விபத்தில் சிக்குவது நிச்சயம் என்பது போல, தாறுமாறாக பயணிக்கிற சமுத்திரகனி கடன் தொல்லையிலும் இன்னும் சில பிரச்சனைகளிலும் சிக்குகிறார். அவற்றிலிருந்து மீண்டுவர அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை விவரித்தபடி நகர்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், தான் அனுபவிக்கும் அவஸ்தைகளையும், மீண்டு வருவதற்கான முயற்சிகளில் சந்திக்கும் மன உளைச்சல்களையும், இழப்புகளையும் படம் பார்ப்பவர்களுக்கு பாடமாய் இருக்கும்படி நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார் சமுத்திரகனி.
பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களாக இருக்கும் வழக்கத்துக்கு மாறாக ‘தங்கமான மனுசன்யா’ என்றெல்லாம் பெயரெடுக்கும் மனிதர்களும் நம்மிடையே உண்டு. அவர்களில் ஒருவரைப் போல் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.
சமுத்திரகனியின் மனைவியாக வருகிற லெஷ்மிபிரியா எளிய குடும்பத்து மனுஷிகளின் தன்மான உணர்வை, ஆசையை, கனவை, ஏக்கத்தை, மன வேதனையை, உற்சாகத்தை என அத்தனை உணர்வுகளையும் துல்லியமாக காட்டியிருக்கிறார்.
கனிவான முதலாளியாக வந்து போகிறார் அபிநயா. கரன் சக்கரவர்த்தி, கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், தேனடை மதுமிதா, சங்கர நாராயணன் என பலர் கவனம் ஈர்க்கும் கேரக்டர்களில் எட்டிப் பார்க்கிறார்கள்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு கச்சிதம்.
பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் ஆப்புகளை தேடிப் போய் உட்கார்கிற செல்வம், பிரச்சனைகளிலிருந்து சுலபமாக மீண்டு வருவது போன்ற காட்சிகள் சற்றே செயற்கைத் தன்மையோடு இருக்கின்றன.
ஒருவன் நன்றாக இருக்கும் வரைதான் மரியாதை. அவனை பிரச்சனைகள் சூழ்ந்துவிட்டால், இருக்கும் நிலையிலிருந்து இறங்கி விட்டால் சுற்றியுள்ள மனிதர்கள் அவனை நடத்தும் விதம் மோசமாகவே இருக்கும். கார்மேனி செல்வம் அந்த விஷயத்தில் லக்கி பர்சன். அவரை அவரைச் சார்ந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் தவிர மற்ற எல்லோருமே கருணை மழை பொழிகிறார்கள். நிஜத்தில் நடக்காதது கதையிலாவது நடக்கிறதே என்பது மகிழ்ச்சி தருகிற அனுபவம்தான்.
படத்தின் திரைக்கதையில் குறிப்பிட்டுச் சொல்ல சிலபல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ‘பணக்காரனாக ஆசைப்படுவது தவறில்லை; அதற்காக தவறான வழிகளில் இறங்கினால் இருக்கிற நிம்மதியைத் தொலைக்க வேண்டியிருக்கும்’ என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னதற்காக இயக்குநர் ராம் சக்ரி உள்ளிட்ட படக்குழுவுக்கு பாராட்டுக்கள!
Rating 3 / 5 

