திருமணமாகி சில மாதங்களிலேயே டைவர்ஸுக்காக நீதிமன்றத்தில் நிற்கும் அந்த இளவயது தம்பதி, தங்களது திருமண வாழ்க்கையை மனப் பக்குவம் இல்லாததால் நாசமாக்கிக் கொண்ட ஒரு தம்பதியைப் பற்றி தெரிந்துகொண்டு, டைவர்ஸ் முடிவை கைவிடுகிற கதை…
கோடிகளில் புரள்கிற பெண் இந்த கதையின் நாயகி. அவள் குப்பை அள்ளும் துப்புரவுத் தொழிலாளியான ஹீரோவை காதலித்து, அப்பாவின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்து கொள்கிறார். தாய்மையடைகிறார். பணக்காரத் திமிர் காட்டுவதால் கணவனை பிரிகிறார். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் நிலைமை என்னவாகிறது என்பது கதையின் மீதி…
தன் தகுதிக்கு துளியும் ஒத்துவராத பெண் தன்னை காதலிப்பதாக சொல்லும்போது உற்சாகம் காட்ட வேண்டும்; அந்த பெண் தனக்கு தன் நிறுவனத்தில் வேலை கொடுக்கும்போது பரவசமடைய வேண்டும்; அவள் தன் சொத்துக்கெல்லாம் அவனை அதிபதியாக்கும்போது மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போக வேண்டும். அவள் திமிராக நடந்துகொள்ளும்போது அவளை அடித்து துவைக்க வேண்டும்; அவள் அவனை ‘எனக்கு நீ ஒத்துவர மாட்டாய்’ என்று சொல்லி துரத்திவிட்டபின் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும். அவளுக்கு குழந்தை பிறந்தபின் தொப்புள்கொடி ஈரம் காயும் முன் குழந்தையை தூக்கிக் கொண்டு போக வேண்டும். பிக்பாஸ் ராணவுக்கு இப்படி ஏகப்பட்ட வேலைகளில் ஈடுபட வேண்டிய, பெருமையாய் சொல்லிக்கொள்ள எதுவுமில்லாத கேரக்டர். எளிமையாக நடித்திருப்பது பாராட்டும்படியிருக்கிறது.
பணக்காரப் பெண் எளிய குடும்பத்து இளைஞனை காதலிப்பதையெல்லாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதையே மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியிருந்தாலும், தான் காட்டும் திமிர்த்தனத்தாலும், மனிதத்தன்மை துளியும் இல்லாதவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியும் என்பது போன்ற நடவடிக்கைகளாலும் கவனம் பெறுகிறார் ரோஸ்மின்.
கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் இளவயது ஜோடியாக துடிப்பான நடிப்போடு வலம் வருகிறார்கள். கருத்து வேறுபாட்டுச் செயல்களால் கலகலப்பூட்டவும் செய்கிறார்கள்.
மனநல நிபுணராக கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக ‘ஊர்வசி’ அர்ச்சனா, நாயகியின் தந்தையாக சம்பத் என மற்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி நடித்திருக்கிறார்கள்.
ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவச உணர்வுக்கு கூட்டிப்போக, கதையின் பரபரப்பைக் கூட்டுவதுபோலிருக்கிறது பின்னணி இசை. எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தின் பல காட்சிகள் சலிப்பூட்டினாலும், திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதன் மூலம் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகளின் மனநிலை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டியிருப்பது சமூகத்திற்கான பாடம்!


