உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு, அதில் தான் சொல்ல நினைக்கும் கருத்தையும், அரசியலையும் இணைத்துத் தருவதை வழக்கமாக கொண்டிருக்கிற மாரி செல்வராஜ், இந்த முறை கபடியில் உலக சாதனை படைத்த மணத்தி கணேசனின் வாழ்க்கைப் பயணத்தை தழுவி பைசனாக்கியிருக்கிறார்.
கதைநாயகன் துருவ் விக்ரம் கபடி வீரருக்கான உழைப்பை உடல் வழியாகவும், மற்ற உணர்வுகளை மிகமிக பொருத்தமான முகபாவங்களிலும் காண்பித்து வியப்பின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார். தனது தந்தை விக்ரம் போலவே நடிப்புக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கும் அவரது ஈடுபாட்டை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
துருவ்வின் தந்தையாக பசுபதி, மகனது கபடி ஆர்வத்துக்கு தடை போடுவது, அப்படி தடை போடுவது சரியல்ல என்று உணர்ந்தபின் வழி விடுவது, மகன் அடிபட்டு மிதிபடும்போது கலங்கி கதறுவது, அவன் சாதனை நிகழ்த்தும்போது ஆனந்தக் கண்ணீரில் மிதப்பது, ஒரு காட்சியில் வெறித்தனமாக சாமியாடுவது என நடிப்பில் தனித்து தெரிகிறார்.
உண்மையில் வாழ்ந்த மனிதர்களின் கதாபாத்திரங்கள் ஏற்றிருக்கும் அமீர், லால் இருவரும் அந்தந்த மனிதர்களாகவே மாறியிருக்கிறார்கள்.
துருவ்வின் காதலியாக அனுபமா பரமேஸ்வரன், அக்காவாக ரஜிஜா விஜயன் என மற்றவர்கள் கதையின் தேவையுணர்ந்து நடித்திருக்க, உடற்கல்வி ஆசிரியராக அருவி மதன் தந்திருக்கும் நடிப்பு வணங்குவதற்கானது.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீக் கொளுத்தி’ பாடல் காத்திரமாக கலந்திருக்க ‘சீனிக்கல்லு’ பாடலில் உருகலாம். பின்னணி இசை கதையோட்டத்துக்கு பொருத்தம்.
எழில் அரசுன் கே ஒளிப்பதிவு தரம்.
விளையாட்டு வீரன் ஒருவன் சாதிப் பாகுபாட்டினால் கொடுமைகளை, கொடூரங்களை அனுபவித்து சாதித்துக் காட்டும் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் முன்னுதாரணம்!
Rating 4 / 5

